






















Updated on:
சென்னை: போலி பட்டா மூலம் ரூ.8 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபர், மனைவியுடன் கைது செய்யப்பட்டார். சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் சுந்தரி (74).
இவருக்குச் சொந்தமான ரூ.8 கோடி மதிப்புள்ள 21.5 சென்ட் நிலம் மாதவரம் லோட்டஸ் காலனி முதலாவது தெருவில் உள்ளது.
இந்த நிலத்தை, மாதவரத்தைச் சேர்ந்த கார்த்திக்(36), அவரது தாயார் ராதா(56), அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அருண் பிரசாத்(29) மற்றும் அவரது மனைவி பிரதீபா(30) ஆகியோர் கூட்டாக சேர்ந்து போலி பட்டா தயாரித்துள்ளனர்.
பின்னர், அந்த போலி ஆவணங்களைக் கொண்டு, சுந்தரியின் இடத்தை தங்களது பெயருக்கு கிரையப் பத்திரங்களாக பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த பத்திரங்களை ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து, பல லட்சம் ரூபாய் பெற்று சொத்தில் வில்லங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, நிலத்தின் உரிமையாளர் சுந்தரி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா, துணை ஆணையர் கீதாஞ்சலி, உதவி ஆணையர் காயத்ரி தலைமையில் மத்திய குற்றப்பிரிவின் போலி ஆவண புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில், கார்த்திக், மாதவரத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருவதும், அருண் பிரசாத் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும், இவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து மூதாட்டியின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த கார்த்திக், ராதா, அருண் பிரசாத், பிரதீபா ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。