


















Updated on:
இரட்டை வேடம் என்றால் அது கதாநாயகர்களுக்கான கதைக் களம் என்று தமிழ் சினிமாவில் பட்டா போட்டுக் கொடுத்துவிட்டார்கள். அதனால், கதாநாயகி இரட்டை வேடம் ஏற்பது கோலிவுட் மிக அபூர்வமான நிகழ்வு. இந்தப் படத்தில் ‘பிக்பாஸ்’ புகழ் ஜனனி இரட்டைச் சகோதரிகளின் வேடத்தை ஏற்றிருக்கிறார். இந்த இரட்டை வேடத்தை வைத்து ஒரு க்ரைம் த்ரில்லர் ஆட்டம் ஆட முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஏ.கே.குமார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா என்று பார்க்கலாம்.
டாக்டர் ரம்யா (ஜனனி) தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றுகிறார். அவர் சப் இன்ஸ்பெக்டர் விசாகனை காதலிக்கிறார். மருத்துவராக இருப்பதால் காதலனோடு நேரம் செலவழிக்க முடியாத நிலை. ஒரு நாள் தன்னைப்போலவே அச்சு அசலாக இருக்கும் தன்னுடைய இரட்டைச் சகோதரியான சரண்யாவை (ஜனனி) தனக்குப் பதிலாக மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, தன் சக மருத்துவத் தோழிகளிடம் ‘அவளைப் பத்திரமா பார்த்துக்குங்க’ என்று சொல்லிவிட்டு காதலனோடு பைக்கில் ரவுண்ட் கிளம்புகிறார்.
தன்னுடைய சகோதரிக்காக டாக்டர் ரம்யாவாக மருத்துவமனைக்குச் செல்லும் சரண்யா, சற்றும் எதிராத ஒரு பாலியல் வன்கொடுமையைப் பார்க்கிறார். அதற்குக் காரணமானவர்களிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் அவருக்கு என்ன நடக்கிறது? சரண்யாவை அவரது சகோதரி ரம்யாவால் மீட்க முடிந்ததா என்று செல்கிறது படம்.
படத்தின் தொடக்கத்தில் டாக்டர் ரம்யா மூன்று இளைஞர்களைப் பின்தொடர்ந்து போய் அவர்களைக் கண்காணிக்கிறார். அவர்கள் போதை மருந்து எடுத்து அரை மயக்கத்தில் இருக்கும்போது அவர்களை கொடூரமாகத் தாக்கி, தான் பணிபுரியும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கும் காட்சியிலிருந்து எதற்காக இந்த வன்மம் என்கிற கேள்வியுடன் படம் வேகமெடுக்கிறது.
சப் இன்ஸ்பெக்டர் விசாகன், மிகவும் மென்மையான மனம் கொண்ட மருத்துவரான தன்னுடைய காதலில் மூன்று பணக்கார இளைஞர்களை இவ்வளவு கொடூரமாகத் தாக்க என்ன காரணம் என விசாரிக்கத் தொடங்கும்போது மருத்துவமனையில் உண்மையாக நடந்த நிகழ்வு என்ன, ரம்யாவின் கோபத்தில் நியாயம் இருந்ததா என்பதை நோக்கி திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது.
‘நிழல்’ என்ற தலைப்புக்கு ஏற்ப, நாயகியின் இரட்டை வேடத்தை இயக்குநர் நன்றாகப் பயன்படுத்தியிருந்தாலும் குற்றத்தில் ஈடுபட்டவர்களை ‘அவள் தானா இவள்?’ எனக் குழம்ப வைத்து, அதைக் கொண்டே அவர்களைப் பீதி அடையச் செய்யும்விதமாக இன்னும் பல காட்சிகளை அமைத்திருக்கலாம். அதற்கு அதிக வாய்ப்பைக் கதைக் களம் கொடுத்தும் இரண்டாம் பாதியை கோர்ட் ரூம் டிராமாவாக மாற்றிவிட்டார்.
நீதிமன்றக் காட்சிகளில், ஒரு குற்ற வழக்கு பணம் இருப்பவர்களுக்கு ஒரு விதமாகவும் பணம் இல்லாதவர்களுக்கு வேறுவிதமாகவும் எவ்வாறு நீதியின் பார்வையும் அது துலங்கும் விதமும் மாறுகிறது அல்லது மாற்றப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டிய விதம் நச்! ஆனால், கிளைமாக்ஸ் காட்சியில் இன்ஸ்பெக்டர் விசாகன் எடுக்கும் முடிவை அப்படி சடாரென்று முடித்திருக்கத் தேவையில்லை.
அதை இன்னும் புத்திசாலித்தனமாக நாயகனின் இரட்டை வேடத்தைக் கொண்டே சாமர்த்தியமாக நகர்த்தியிருக்கலாம். இயக்குநரின் சிக்கல் தன்னுடைய திரைக்கதையை விரிவாக விவாதிக்காமல் ஒற்றைப் பார்வையுடன் கையாண்டதுதான். இந்தப் பெருங்குறையால் கதையில் நல்ல ஐடியா இருந்தும் அதும் சோபிக்க வேண்டிய இடங்களில் அது நடக்காமல் போய்விடுகிறது.
படத்தில் இரட்டை வேடம், இரண்டிலும் தரமான வேறுபாடுகளைக் காட்டி அட்டகாசமாக நடித்திருக்கிறார் ஜனனி. காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் என மூன்று வித உணர்ச்சிகளுக்கும் இரட்டைச் சகோதரிகளின் அணுகுமுறையைத் தரமாகவே நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக சப் இன்ஸ்பெக்டராக நேர்வழியில் சட்டத்தையும் குற்றவாளிகளையும் அணுகும் கதாபாத்திரத்தில் விசாகனாக நடிப்பு நன்று. மற்றொரு கதாநாயகனாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் வரும் கௌசிக் நீதிமன்றக் காட்சிகளில் திறமையைக் காட்டியிருக்கிறார்.
குற்றவாளிகளின் வழக்கறிஞர் அபிஷேக், மகளை இழந்த சபிதா ஆனந்தை நோகடிக்கும் காட்சி உண்மையிலேயே மனதைக் கனக்கச் செய்கிறது. துணைக் கதாபாத்திரங்களில் வரும் ரமேஷ் கண்ணா, ஹரிஹரன் ராஜு, திவ்யா கிருஷ்ணன் எனப் பலரும் கிடைத்த வெளியில் நன்றாகவே நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் அபுபக்கர் இசையில் பாடல்கள், பின்னணி இசை பெரிய பலமாக அமையவில்லை. மோகன் குமாரின் ஒளிப்பதிவும் கூட தொலைக்காட்சி சீரியல் தன்மையுடந்தான் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறது.
திரைக்கதையில் பல போதாமைகள் இருந்தாலும் எடுத்துக்கொண்ட கதைக் கரு, இரட்டைவேடத்துக்கான ஐடியா, 104 நிமிடங்கள் மட்டுமே கொண்ட படத்தின் நீளம், எடிட்டர் தினேஷின் நறுக்கென்ற படத்தொகுப்பு ஆகியவரை படத்தை இறுதிவரை ரசிக்க வைக்கின்றன. பணமும் அதிகாரமும் இருப்பவர்களின் முன்னால் எளியவர்களுக்கு மறுக்கப்படும் நீதியைப் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருக்கிறது இந்த நிழல்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。