


















Updated on:
மதுரை: நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்திய கோரிக்கைகளில் மதுரை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாக, தென் மாவட்ட மக்கள், தொழில்முனைவோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அண்மையில், டெல்லியில் நடைபெற்ற 11-வது நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில், முதல்வர் ச.ஜோசப் விஜய் கலந்துகொண்டு, தமிழகத்தின் வளர்ச்சிக்கான மிக முக்கியமான கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தார். அதில் கல்வி, அதிவேக ரயில் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த பல கோரிக்கைகளை அவர் வலியுறுத்தியிருந்தார்.
குறிப்பாக, கோவைக்கு எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை, சென்னை - கன்னியாகுமரி அதிவேக ரயில் வழித்தடம் போன்ற திட்டங்களைக் கோரியிருந்தார் முதல்வர் விஜய்.
ஆனால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் மதுரையின் எய்ம்ஸ், விமான நிலையம் விரிவாக்கம், மதுரை - தூத்துக்குடி தொழில் வணிகச் சாலை, மெட்ரோ ரயில் போன்ற வாழ்வாதாரத் திட்டங்களை நிதி ஆயோக் மேடையில் அழுத்தமாக முதல்வர் வைக்கவில்லை. இது மதுரை மட்டுமில்லாது தென் மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்ளை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
இது குறித்து மதுரை உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுச் சங்கம்’ (MID) ஆலோசகர் டாக்டர் மகேந்திரன் கூறுகையில், “ஒட்டுமொத்த தென் தமிழகத்தின் தலைநகரமாக விளங்கும் மதுரையின் மிக முக்கியமான, நீண்டகால உள்கட்டமைப்புத் திட்டங்கள் இந்த கோரிக்கைப் பட்டியலில் முற்றிலுமாக விடுபட்டிருப்பது எங்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
நிதி ஆயோக் கூட்டத்தில் முற்றிலுமாக மதுரையின் முக்கியத் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தோப்பூரில் அமையவிருக்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் தற்போதுதான் 50 சதவீதத்தை நெருங்கியுள்ளன. வரும் மாதங்களில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகங்களை முழுமையாகத் திறக்க வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், இந்தத் திட்டத்துக்கான மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரிக்கவும், பணிகளை விரைந்து முடிக்கவும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.
அதை விடுத்து, புதிய எய்ம்ஸ் கோரிக்கைகளுக்குக் காட்டிய முக்கியத்துவம், மதுரையின் நடப்புத் திட்டத்தின் மீது காட்டப்படாதது வருத்தமளிக்கிறது” என்றார்.
விமான நிலையம் விரிவாக்கம்:
கடந்த மார்ச் 2026-ல் தான் மதுரை விமான நிலையத்துக்கு மத்திய அமைச்சரவை 'சர்வதேச அந்தஸ்து' வழங்கி வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்புதலை அளித்தது. ஆனால், பெரிய ரக சர்வதேச விமானங்கள் (Wide-body aircrafts) வந்து செல்வதற்கு ஏதுவாக, விமான நிலைய ஓடுதளத்தை 2,285 மீட்டரிலிருந்து 3,810 மீட்டராக விரிவாக்கம் செய்யும் பணி நிலுவையில் உள்ளது.
இதற்கான நில எடுப்புப் பணிகள் மற்றும் சின்ன உடைப்புப் பகுதி மறுவாழ்வுத் திட்டங்களுக்கு மத்திய - மாநில அரசுகளின் கூட்டு நிதி மற்றும் விரைவான உள்கட்டமைப்பு அனுமதிகள் தேவை. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சர்வதேச நுழைவு வாயிலின் விரிவாக்கம் குறித்து நிதி ஆயோக் கோரிக்கைகளில் ஒரு வார்த்தை கூட இடம் பெறாதது ஏன் என்று தெரியவில்லை.
மெட்ரோ ரயில் திட்டம்
அதேபோல், மதுரையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை (DPR) மத்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. சென்னை உள்கட்டமைப்புகளுக்குக் குரல் கொடுத்தது போல, மதுரையின் இந்த அதிமுக்கிய பொதுப் போக்குவரத்துத் திட்டத்துக்கு மத்திய அரசின் நிதிப் பகிர்வை (Central Equity/Sovereign Loan approvals) முதல்வர் வலிமையாகக் கோரியிருக்க வேண்டும்.
தென் தமிழகத்தின் ஜீவநாடியான வைகை நதியின் சுற்றுச்சூழல் சீரமைப்பு, தூய்மைப்படுத்துதல் மற்றும் ஸ்மார்ட் சிட்டி உள்கட்டமைப்புப் பணிகளுக்குத் தேவையான சிறப்பு மத்திய நிதியுதவி (Special Central Grants for River Rejuvenation) குறித்த எந்தவொரு திட்ட வரைவும் இக்கூட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.
சென்னை மற்றும் கொங்கு மண்டலங்களுக்கு இணையாக, தென்மாவட்டங்களின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சித் திறவுகோலாக விளங்குவது மதுரை மாநகரம் மட்டுமே. மதுரைக்கான திட்டங்கள் முடங்கினால், அது ஒட்டுமொத்த தென்தமிழகத்தின் வளர்ச்சியையும் முடக்குவதற்குச் சமம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தென் மாவட்ட வளர்ச்சி முடக்கம்
மாமதுரையர் அமைப்பு தலைவர், தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்க மாநிலத் தலைவர் க.திருமுருகன் கூறுகையில், “தென் தமிழ்நாட்டின் நுழைவாயிலாகவும், தொழில், கல்வி, மருத்துவம், சுற்றுலா மற்றும் வர்த்தக மையமாகவும் விளங்கும் மதுரையின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக வலியுறுத்தப்படும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகளை விரைவுபடுத்துதல், மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கம், தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் இடம்பெறாதது வருத்தத்துக்குரியது.
மதுரை - தூத்துக்குடி தொழில் வழித்தடத்தில் வாகன உதிரிபாக மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான தொழிற்பூங்காக்கள் அமைத்தல், புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற முக்கிய கோரிக்கைகளும் முன்னிறுத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியமாக இருந்தது.
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியே தமிழகத்தின் சமச்சீர் வளர்ச்சிக்கான அடித்தளமாகும். எனவே, எதிர்காலங்களில் மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஆகிய இரண்டும் தென் மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。