




















Updated on:
சென்னை: பன்னாட்டு விமான நிலைய முனையம்-2, அமைந்தகரை ஆகிய இரண்டு இடங்களில் புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், கடந்த 1935-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளை பெற்று, கோ-ஆப்டெக்ஸின் 144 கிளைகளில் விற்கப்படுகின்றன.
இந்நிலையில், இளைஞர்கள், சுற்றுலா பயணிகள், தொழில் வணிகப் பயணிகள் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் மத்தியில் கோ-ஆப்டெக்ஸ் மதிப்பை உயர்த்தும் வகையில், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் 2-வது முனைய பகுதியில் 150 சதுர அடி பரப்பளவில் ரூ.38 லட்சத்தில் புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி நேற்று திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். விமான நிலைய வளாகத்தில் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையம் திறப்பது இதுவே முதன்முறையாகும்.
இவ்விழாவில் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார், கைத்தறி துறை முதன்மை செயலர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுதவிர, சென்னை அமைந்தகரை அம்பா ஸ்கை ஒன் வணிக வளாகத்தில் 1,000 சதுர அடி பரப்பளவில் ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தையும் அமைச்சர் விஜய் பாலாஜி திறந்து வைத்தார்.
இதுகுறித்து, கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் கூறும்போது, “கோ-ஆப்டெக்ஸ் புதிய ரகங்களான மகளிர் ஆயத்த ஆடை ரகங்கள், இன்டிகோ மற்றும் நவீன அச்சிடல் ஆடை தொகுப்புகள், டிஜிட்டல் முறையில் அச்சிடப்பட்ட படுக்கை விரிப்புகள், மூங்கில் இழை மற்றும் இருவண்ண பூத்துண்டு ரகங்கள் ஆகியவை விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சில்லறை விற்பனை குறியீடாக ரூ.100 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது”என்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。