



















Updated on:
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கைப் பணம் திருடப்படுவதாக துறவிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ராமர் கோயில் காணிக்கை பணம் எண்ணும் குழு உறுப்பினர் மஹிபால் சிங், பல குற்றச்சாட்டுகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ராமர் கோயிலில் பணம் எண்ணும் போது பெட்டியில் 10 கட்டுகள் இருப்பதாக ஆவணத்தில் குறிப்பிடப்படுகிறது. ஆனால், வங்கி ஊழியர்கள் உண்மையில் 13 கட்டுகளைப் பெட்டியில் வைத்திருந்தனர். இந்த முரண்பாட்டை உணர்ந்து, பெட்டியில் இருந்த கட்டுகளைச் சரி பார்த்த போது 10 இருக்க வேண்டிய இடத்தில் 13 பணக்கட்டுகள் இருந்தன.
இது எவ்வளவு காலமாக நடைபெறுகிறது என்பதை விசாரிக்க, ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவித்தேன். பின்னர், நன்கொடைகளைச் சரி பார்த்து எண்ணுவதற்காக மேலும் 2 பேர் நியமிக்கப்பட்டனர். அதன் பிறகும் குறைகள் சரிசெய்யப்படவில்லை. ஆனால், என்னைப் பணியில் இருந்து நீக்கிவிட்டனர்’’ என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் இணைத்து சமாஜ்வாதி எம்.பி. அகிலேஷ் வெளியிட்ட பதிவில், ‘‘இன்று உலகம் அறிந்து கொண்ட இந்தச் செய்தி, உண்மையில் மிகவும் பழையது.
‘ட்ரஸ்ட்’ (அறக்கட்டளை) என்றால் நம்பிக்கை. இந்த விவகாரத்தை அறக்கட்டளையே தீவிரமாக எடுத்துக் கொண்டு, நீதித் துறை விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும். குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். அரசு ஏன் மவுனம் காக்கிறது? விசாரணை கோரிக்கையைக் கண்டு முக்கியப் புள்ளிகள் அஞ்சுகிறார்களா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ராமர் கோயில் வளாகத்தில் உள்ள 15 கோயில்களில் 44 காணிக்கை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. தவிர, அறக்கட்டளையின் 2 அலுவலகங்களிலும் நன்கொடை வசூலித்து ரசீதுகள் வழங்கப்படுகின்றன.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。