





















Updated on:
சென்னை: தமிழகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர், இளநிலை பொறியாளர், கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) உட்பட 7 பேரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த ஒரு வாரமாக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3 இளநிலை பொறியாளர் சுப்பிரமணியன், வடிகால் பணிக்கு அளவீட்டுப் பதிவேடு தயாரிப்பது மற்றும் ஏற்கனவே முடிக்கப்பட்ட சாலைப் பணிகளுக்காக ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கீழதிருச்செந்தூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் (ரூ.10 ஆயிரம்), தேனி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் (ரூ.5 ஆயிரம்), திண்டுக்கல் பிர்கா சர்வேயர்கள் முகமது இப்ராகிம் (ரூ.5 ஆயிரம்), மீனாம்பிகை (ரூ.10 ஆயிரம்) பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் பெற்றபோது பிடிபட்டனர்.
அதேபோல, திருவள்ளூர் மாவட்டத்தில் 215 நெல் மூட்டைகளுக்கான கட்டணப் பட்டியலை அனுப்ப, ஒரு மூட்டைக்கு ரூ.50 வீதம் ரூ.10,750 லஞ்சம் பெற்ற கட்டணப் பட்டியல் வசூலிப்பாளர் சவுந்தர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் லாரிக்கு தகுதிச் சான்றிதழ் புதுப்பித்துதர ரூ.5,800 லஞ்சம் கேட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த் மற்றும் அவருடன் இருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டனர்.
பழைய ஊழல் வழக்குகளை விசாரித்த மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைகளை வழங்கியுள்ளன. விருத்தாசலம் தாலுகா அலுவலக சர்வேயர் அண்ணாதுரை, கிராம உதவியாளர் கண்ணன் ஆகியோருக்கு லஞ்ச வழக்கில் 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், மொத்தம் ரூ.10,000 அபராதமும் விதித்து கடலூர் நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி தீர்ப்பளித்தது. மாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக ஊரக நல அலுவலர் இந்திராணிக்கு லஞ்ச வழக்கில் 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் கடந்த 9-ம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。