
























Updated on:
வாகனத்தின் ஜன்னலோரம் அமர்ந்து பகல் பொழுதில் கடந்து செல்லும் ஊர்களையும் மக்களையும் அவர்களது வாழ்க்கையையும் இயற்கைக் காட்சிகளையும் ரசித்துக்கொண்டே செல்வது சுகமான அனுபவம். அப்படித்தான் இந்தக் கோடை விடுமுறைக்கு கன்னியாகுமரி சென்றோம். அங்கு மக்களின் பேச்சு, உணவு, பழகுமுறைகளைப் பார்த்து ரசித்தோம். ஒளிப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த திருவள்ளுவர் சிலையை நேரில் கண்டு பிரமித்தபோதுதான் அதன் உண்மை உயர்வை உணர முடிந்தது.
விவேகானந்தர் கடலில் நீந்திச் சென்று பாறையில் அமர்ந்து தவமிருந்த இடம் என்பதை நினைக்கும்போதே விவேகானந்தர் நினைவு இல்லத்தில் இருந்த எங்களுக்குச் சிலிர்த்தது. தியானம் தெரியாவிட்டாலும் கண்களை மூடி அமர்ந்திருந்தபோது நிஜமாகவே மனதில் அமைதி சூழ்ந்தது, ஆனந்தமானது.
அதிகாலைச் சூரிய உதயம் பார்க்கச் சென்றோம். கடலும் காற்றும் ரம்மியமாக மனதை மயக்கின. ஆனால், சூரிய உதயத்துக்குக் காத்திருந்து, காத்திருந்து ஏமாந்தோம். மழை வரும் போலிருந்ததால் மேகமூட்டத்தில் சூரியன் தலைகாட்டவில்லை. சலித்துக் கொண்டபோது எங்களோடு வந்த ஒரு சுட்டிப் பையன் எதார்த்தமாகச் சொன்னான்: “இன்னைக்கு சண்டேதானே. அதான் ‘சன்’னும் லீவு எடுத்திடுச்சி போல”. எல்லாரும் சிரித்துவிட்டோம்.
சுற்றுலாத் தலங்களில் பல்வேறு தரப்பட்ட மக்களும் கூடுவதால் அவர்களோடு பேசி, பழகக் கிடைக்கும் வாய்ப்பு ஒரு வரம். அதையும் அனுபவித்தோம். மறக்காமல் மக்ரூன், பலாப்பழ சிப்ஸ் எல்லாம் வாங்கிக் கொண்டோம். பயணம்தான் உலகை உணர்த்தி மனதை விசாலப்படுத்தும். பொது அறிவை வளர்த்து மனித நேயத்தைப் பெருக்கும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பயணம் செய்வோமா தோழிகளே?
- அ. யாழினி பர்வதம், சென்னை.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。