



























Updated on
:
2 min read
ஊட்டி: ஊட்டி ரோஜா பூங்காவில் இன்று (மே 14) 21-வது ரோஜா கண்காட்சி தொடங்கியது. 70 ஆயிரம் ரோஜாக்களால் ஆன அன்னப்பறவை ஜோடி பார்வையாளர்களைக் கவர்ந்தது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில், ஆண்டுதோறும் நடைபெறும் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியான 21-வது ரோஜா கண்காட்சி இன்று ஊட்டி ரோஜா பூங்காவில் தொடங்கியது.
கண்காட்சியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தொடங்கி வைத்து, பூங்காவில் அமைக்கப்பட்ட மலர் அலங்காரங்களை பார்வையிட்டார். இந்த ஆண்டு கண்காட்சியின் சிறப்பம்சமாக, ‘பறவைகளின் சொர்க்கம்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 2 லட்சம் ரோஜா மலர்களால் பல்வேறு பறவை இனங்களின் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 70,000 ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட அன்னப் பறவை ஜோடி சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றன. மேலும், கழுகு, இருவாச்சி பறவை, புல் புல், பேரடைஸ் ஃபிளை கேச்சர், தூக்கணாங்குருவி, தேன் சிட்டு, மலபார் இருவாச்சி, நீலகிரி லாஃபிங் திரஷ் உள்ளிட்ட மொத்தம் 14 வகையான பறவை வடிவங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
கூடுதலாக, ‘ஆங்க்ரி பேர்ட்ஸ்’ போன்ற கார்டூன் வடிவங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. பூங்கா முழுவதும் 4,310 ரகங்களைச் சேர்ந்த 33,000 ரோஜா செடிகள் பல்லாயிரக்கணக்கான வண்ணங்களில் பூத்து குலுங்கி சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
கண்காட்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு ரசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு 3 நாட்கள் நடந்த ரோஜா கண்காட்சி, இந்த ஆண்டில் 5 நாட்கள் நடைபெறவுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。