

























முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் குமார் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்பு.
Updated on:
பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பிஹார் அமைச்சரவை விரிவாக்கம் இன்று மேற்கொள்ளப்பட்டது. இதில், முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் குமார் உட்பட 32 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், பாஜக 89 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பிற கூட்டணி கட்சிகளான எல்ஜேபி(ராம்விலாஸ்), ஹெச்ஏஎம்(எஸ்), ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளும் கணிசமான வெற்றியை பதிவு செய்தன. இதையடுத்து, நவம்பர் 20-ம் தேதி நிதிஷ் குமார் 10-வது முறையாக முதல்வராக பதவியேற்றார்.
பாஜக - ஐக்கிய ஜனதா தளம் இடையே ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக அவர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
நிதிஷ் குமாரின் ராஜினாமாவை அடுத்து, பாஜகவின் சாம்ராட் சவுத்ரி கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல்வராக பதவியேற்றார். அவருடன் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த விஜய் குமார் சவுத்ரி மற்றும் பிஜேந்திர பிரசாத் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, நிதிஷ் குமார் உள்ளிட்டோர்
இந்நிலையில், முதல்வர் சாம்ராட் சவுத்ரி தனது அமைச்சரவையை இன்று விரிவுபடுத்தினார். பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இதற்கான பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜே.பி. நட்டா, பாஜக தலைவர் நிதின் நவீன், முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் உட்பட ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பாஜக சார்பில் 15 பேர் உள்பட மொத்தம் 32 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。