




















Updated on
:
1 min read
சென்னை: தவெக பெண் நிர்வாகிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகர் பொன்ராஜ் மீது சென்னை, கடலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராகவும், தனிப்பட்ட உதவியாளராகவும் பணியாற்றியவர் பொன்ராஜ்.
இவர், டிவி விவாதங்களிலும், யூடியூப் சேனல்களிலும் அரசியல் கருத்துகளை பேசி வருகிறார். அண்மையில் தவெக குறித்து அவர் பேசிய வீடியோவில், கட்சியின் பெண்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த மார்ச் 26-ம் தேதி தவெக தலைவர் விஜய் நேரில் சென்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதில், ‘திமுக-வின் அதீத ஆதரவாளராக செயல்பட்டு வரும் பொன்ராஜ் தமிழகம் முழுவதும் இருக்கும் எனது அம்மா, அக்கா, தங்கைகளான ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்கள் இனத்தையே கொச்சையான அர்த்தம் தொனிக்கும் சொல்லை நேரடியாகவே பயன்படுத்தி விமர்சித்துள்ளார்.
இதனால், பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரில் விஜய் தெரிவித்திருந்தார். மேலும், தவெக பெண் நிர்வாகிகளும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீஸார் பொன்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
4 சட்டப்பிரிவில்..
பொன்ராஜின் சர்ச்சை பேச்சை கண்டித்து தவெக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த மார்ச்சில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் பொன்ராஜ் மீது பெண்களை இழிவாக பேசியது உள்ளிட்ட 4 சட்டப்பிரிவின் கீழ் கடலூர் புதுநகர் போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。