




























Updated on
:
1 min read
நீண்டகாலமாக இனப்படுகொலைகளில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்ட நாடு பாகிஸ்தான் என்று ஐநா பாதுகாப்பு சபையில் பேசிய இந்திய பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி விமர்சித்துள்ளார்.
ஆயுத மோதல்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாத்தல் என்ற பொருளில் ஐநா பாதுகாப்பு சபையில் திறந்த விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் பார்வதனேனி, “நீண்டகாலமாக இனப்படுகொலைகளில் ஈடுபட்ட களங்கப்பட்ட வரலாற்றைக் கொண்ட நாடு பாகிஸ்தான். அப்படிப்பட்ட ஒரு நாடு இந்த அவையில் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை (காஷ்மீர் விவகாரம்) குறித்துப் பேசுவது முரண்பாடானது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் புனித ரமலான் மாதத்தில், அமைதி, சிந்தனை, கருணையின் காலத்தில் ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உமித் போதை மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஒரு காட்டுமிராண்டித்தனமான வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதை உலகம் மறக்கவில்லை. எந்த வகையிலும் ராணுவ இலக்காக இருக்க முடியாத ஒரு இடத்தில் கோழைத்தனமான, மனசாட்சியற்ற தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. இதில், 269 பேர் உயிரிழந்தனர், 122 பேர் காயமடைந்தனர்.
இருட்டில் அப்பாவி பொதுமக்களைக் குறிவைக்கும் பாகிஸ்தான், சர்வதேச சட்டத்தின் உயர் கொள்கைகளை ஆதரிப்பது முரண்பாடானது. ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கு எதிராக பாகிஸ்தான் எல்லை தாண்டி நடத்திய வன்முறை காரணமாக 94,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்ததாக UNAMA மதிப்பிட்டுள்ளது. தன் சொந்த மக்கள் மீது குண்டு வீசி திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்திய ஒரு நாடு, இத்தகைய கொடூர ஆக்கிரமிப்புச் செயல்களை செய்வதில் ஆச்சரியமில்லை.
'ஆபரேஷன் சர்ச்லைட்' என்பது 1971-ம் ஆண்டு மார்ச் மாதம் கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) பங்களாதேஷ் தேசியவாத இயக்கத்துக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்திய ரகசிய பெயர். 'ஆபரேஷன் சர்ச்லைட்' நடவடிக்கையின்போது பாகிஸ்தான் தனது சொந்த ராணுவத்தைக் கொண்டு 4 லட்சம் பெண்களை இனப்படுகொலை செய்யவும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கவும் அனுமதித்தது.
இதுபோன்ற மனிதாபிமானமற்ற நடத்தையை பாகிஸ்தான் தனது எல்லைக்கு உள்ளேயும் வெளியேயும் பல பத்தாண்டுகளாக நடத்துகிறது. உள்நாட்டுத் தோல்விகளை மறைக்க மீண்டும் மீண்டும் இத்தகைய நடவடிக்கைகளில் அது ஈடுபடுகிறது. நம்பிக்கை, சட்டம், அறநெறி என எதுவும் இல்லாத நிலையில், பாகிஸ்தானின் இத்தகைய பிரச்சாரத்தை உலகம் எளிதில் கண்டுகொள்ளும்” என தெரிவித்தார்.
ஐநாவுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி, காஷ்மீர் விவகாரம் குறித்து எழுப்பியதை அடுத்து அதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்திய பிரதிநிதி இவ்வாறு பேசியது குறிப்பிடத்தக்கது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。