




















Updated on
:
1 min read
சென்னை: தமிழகத்தில் புதிய தவெக அரசில், காங்கிரஸில் யாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்பது குறித்த எதிர்பார்ப்பும் விவாதங்களும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இதில் கடும் போட்டிகளுக்கு இடையே மயிலாடுதுறையில் ஜமால் முகமது யூனுஸ், மேலூரில் பி. விஸ்வநாதன், குளச்சலில் தாரகை கத்பர்ட், விளவங்கோட்டில் பிரவீன் டி.டி. கிள்ளியூரில் எஸ். ராஜேஷ் குமார் ஆகிய 5 பேர் வெற்றி பெற்றனர்.
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, தவெக ஆட்சியமைக்க இந்த 5 எம்.எல்.ஏ-க்களும் உடனடியாகத் தங்களது ஆதரவுக் கடிதத்தை வழங்கினர். முன்னதாக, தவெக தலைவர் விஜய் தனது முதல் மாநாட்டு உரையிலேயே, “கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் உரிய பங்கு வழங்கப்படும்” என அதிரடியாக அறிவித்திருந்தார்.
அந்த வாக்குறுதியின்படி, புதிய அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இரண்டு அமைச்சர் பதவிகளை வழங்க தவெக தலைமை முன்வந்துள்ளது. இதனை காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆகியோரும் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், வெற்றி பெற்றுள்ள 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் தங்களுக்குள் அமைச்சர் பதவியைக் கைப்பற்ற டெல்லி வரை தீவிரமாகக் காய் நகர்த்தி வருகிறார்கள்.
இதில், மாணிக்கம் தாகூரின் முழு ஆதரவோடு, கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் தனக்கான அமைச்சர் நாற்காலியைப் பெரும்பாலும் உறுதி செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மறுபுறம், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பரிந்துரை மூலமாக, மேலூர் எம்.எல்.ஏ விஸ்வநாதன் அமைச்சர் பதவியை பிடிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, சீனியாரிட்டி மற்றும் மேலிட செல்வாக்கின் அடிப்படையில் ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகிய இருவருக்குமே அமைச்சர் சீட் கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。