






















Updated on
:
2 min read
சென்னை: சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தின் அவசரகால கதவை திறந்து பயணி ஒருவர் குதித்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால், அடுத்ததாக லண்டனில் இருந்து வந்த விமானம் சென்னையில் தரையிறங்க முடியாததால், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், 217 பயணிகளுடன் நேற்று அதிகாலை 3.25 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி, ஓடு பாதையில் இருந்து டாக்ஸி வேயில் வந்து நிற்க தயாரானது.
அப்போது, விமானத்தில் இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த முகமது நிஜாமுதீன் செரீப் (30) என்ற பயணி திடீரென விமானத்தின் அவசரகால கதவை திறந்து, மின்னல் வேகத்தில் அதன் சரக்கு பாதை வழியாக வெளியில் குதித்து ஓடினார். இச்சம்பவம் சென்னை விமான நிலையத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதியில் அவசரகால அபாய அறிவிப்பு எச்சரிக்கை மணி ஒளிக்கப்பட்டது. உடனடியாக, பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து, விமானத்தின் அவசரகால கதவு வழியாக வெளியில் குதித்து ஓடிய பயணியை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதற்கிடையில், விமானம் அது நிக்க வேண்டிய இடத்துக்கு பதிலாக, டாக்ஸி வேயில் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, அடுத்ததாக லண்டனில் இருந்து 284 பயணிகளுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சென்னையில் தரையிறங்குவதற்காக வந்தது.
டாக்ஸி வேயில் ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் நின்று கொண்டு இருந்ததால், அந்த விமானம் சென்னையில் தரையிறங்க முடியாததால், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
உடனடியாக, மத்திய உளவுத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, ஓடும் விமானத்தில் இருந்து கீழே குதித்த பயணியை தனி அறையில் வைத்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரிதனர். விசாரணையில், அந்த பயணி மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசியதால், அவர் அவர் உண்மையில் மனநிலை பாதிக்கப்பட்டவரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வந்த ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் இருந்து மீண்டும் சார்ஜாவுக்கு அதிகாலை 4 மணிக்கு புறப்பட வேண்டும். ஆனால், இந்த சம்பவம் காரணமாக விமானம் தாமதமாக 7.45 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், பெங்களூரில் இருந்து சென்னைக்கு திரும்பியது. சென்னையில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு லண்டன் புறப்பட வேண்டிய அந்த விமானம் காலை 9 மணி அளவில் லண்டன் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
விமானத்தின் அவசரகால கதவை திறந்து விமானத்தில் இருந்து குதித்த பயணிக்கு லேசான சிறாய்ப்பு காயங்கள் ஏற்பட்டதால், அவருக்கு சென்னை விமான நிலைய மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சினிமா காட்சி போல் நடந்த இந்த சம்பவத்தால், இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。