
















Updated on:
வாஷிங்டன்: பிரான்சில் அண்மையில் நடந்து முடிந்த ஜி7 உச்சிமாநாட்டில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறு பலமுறை கெஞ்சினார் என்றும், இத்தாலியில் சரிந்து வரும் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்தவே அவர் இவ்வாறு செய்கிறார் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.
ட்ரம்பின் இந்த விமர்சனங்களுக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்துள்ளார். “அதிபர் ட்ரம்ப் அவர்களே, காரணமே இல்லாத உங்களின் இந்த தொடர் தாக்குதல்கள் முற்றிலும் அர்த்தமற்றவை. என்னுடைய செல்வாக்கைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை; முதலில் உங்கள் செல்வாக்கின் மீது நீங்கள் கவனம் செலுத்துங்கள்" என்று மெலோனி சாடியுள்ளார்.
முன்னதாக, தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டிருந்த ட்ரம்ப், “பிரான்ஸ் ஜி7 மாநாட்டின் போது ஜார்ஜியா மெலோனி என்னுடன் புகைப்படம் எடுக்க மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தார். ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ஆதரவளிக்க இத்தாலி மறுத்ததால், அந்நாட்டில் மெலோனியின் செல்வாக்கு மிகவும் மோசமடைந்துள்ளது.
போரின் போது அமெரிக்க ராணுவ விமானங்கள் இத்தாலியின் ஓடுதளங்களைப் பயன்படுத்தக் கூட அவர் அனுமதிக்கவில்லை. அமெரிக்கா ஈரானை ராணுவ ரீதியாக வீழ்த்திய பிறகு, இப்போது தனது அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள மெலோனி மீண்டும் நட்பு பாராட்ட விரும்புகிறார். ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை" என்று பதிவிட்டிருந்தார்.
ட்ரம்பின் இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரித்துள்ள மெலோனி, "உங்களின் நண்பராக இருப்பது என் செல்வாக்கை உயர்த்த எந்த வகையிலும் உதவவில்லை. அது உங்களைச் சார்ந்து இருக்கவும் இல்லை. இத்தாலியின் தேசிய நலனைப் பாதுகாப்பதில் தான் என் செல்வாக்கு அடங்கியுள்ளது. இத்தாலியில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களின் பயன்பாடு இருதரப்பு ஒப்பந்தங்களின்படி மட்டுமே நிர்வகிக்கப்படுகிறது. நான் பிரதமராக இருக்கும் வரை அந்த உடன்பாடுகள் மீறப்பட மாட்டாது. இத்தாலி என்றும் ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு" என்று தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。