























Updated on
:
1 min read
சென்னை: முதல்வர் விஜய்யின் செயலர்களாக நியமிக்கப்பட்ட 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும், அவரது தனிச் செயலர்களாக முதலில் ஐஏஎஸ் அதிகாரிகள் ப.செந்தில்குமார், லட்சுமி பிரியா ஆகியோரும், தொடர்ந்து அண்ணாதுரை, விஷ்ணு ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
வழக்கமாக, முதல்வரின் தனிச் செயல்களாக நியமிக்கப்பட்டாலும், அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்படும். அவர்கள் அந்த துறைகள் சார்ந்த விவகாரங்களை கவனிப்பதுடன், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் பணிகளையும் மேற்கொள்வார்கள்.
அந்த வகையில், முதல்வரின் முதன்மைச் செயலரான ப.செந்தில்குமார், நிதி, உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை, பொது மற்றும் மறுவாழ்வு, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், மின்சாரம், தொழில், நெடுஞ்சாலை, சுகாதாரம், பொதுப்பணி, ஊழல் தடுப்பு ஆணையம் ஆகிய துறைகளை கவனிப்பார்.
முதல்வரின் 2-ம் நிலை செயலர் லட்சுமி பிரியா, முதல்வர் அலுவலக நிர்வாகம், முதல்வரின் அரசியல் சாரா சந்திப்புகள், பயண ஏற்பாடு, அரசு மரபு, சுற்றுச்சூழல், வனம், பள்ளிக்கல்வி, உயர்கல்வி, வருவாய், ஊரக வளர்ச்சி, வீட்டு வசதி, சமூக நலம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் நலன் ஆகிய துறைகளுக்கு பொறுப்பு அதிகாரியாக இருப்பார்.
முதல்வரின் 3-ம் நிலை செயலர் ஏ.அண்ணாதுரை, இயற்கை வளம், நீர்வளம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளம், கூட்டுறவு, உணவு, சமூக சீர்திருத்தம், கைத்தறி, துணி நூல், போக்குவரத்து, சட்டம், சட்டப்பேரவை செயலகம், மனிதவள மேலாண்மை, தமிழ் வளர்ச்சி, செய்தித் துறைகளை கவனிப்பார்.
முதல்வரின் 4-ம் நிலை செயலர் வி.விஷ்ணு, வணிகவரி, பதிவுத் துறை, சுற்றுலா, அறநிலையங்கள் துறை, குறு, சிறு, நடுத்தர தொழில்கள், தகவல் தொழில்நுட்பம், இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் நலன், திட்டம், வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம், சிறப்பு முயற்சிகள் ஆகிய துறைகளை கவனிப்பார் என்று முதல்வர் அலுவலக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。