













விழுப்புரத்தில் உள்ள அதிமுக அலுவலக நுழைவாயிலில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார். படம் - இரா.தினேஷ்குமார்.
Updated on
:
1 min read
விழுப்புரம்: தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசுக்கு, அதிமுக கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததால் சி.வி.சண்முகத்தின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இவருக்கு மாற்றாக, விழுப்புரம் நகர முன்னாள் செயலாளர் பசுபதியை பொதுச் செயலாளர் பழனிசாமி நியமித்தார்.
இந்நிலையில், விழுப்புரம் காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகே சென்னை நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்துக்கு, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பசுபதி உரிமை கோரி வருகிறார். இதற்கு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாவட்ட அதிமுக அலுவலகத்துக்குள் இரு தரப்பினரும் நேற்று நுழைய முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீஸாருடன் இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, விழுப்புரம் கரும்பு திருமண மண்டத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர் பசுபதி தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நுழையபோவதாக தகவல் வெளியானது. இதேபோல், திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி வரும் சி.வி.சண்முகம் எம்எல்ஏ தலைமையில் ஒரு குழுவினர், மாவட்ட அதிமுக அலுவலகம் செல்ல இருப்பதாக கூறப்பட்டது. இதனால், ரயில்வே மேம்பாலம் மற்றும் முத்தாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே போலீஸார் குவிக்கப்பட்டனர்.
திண்டிவனத்தில் இருந்து விழுப்புரத்துக்கு வந்த சி.வி.சண்முகம், தனது ஆதரவாளர்களுடன் உரையாற்றும்போது, “இப்பிரச்சினையை சட்டப்படி சந்திப்போம். அனைவரும் அமைதி காக்க வேண்டும். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார். இதேபோல் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளர் பசுபதி, “கரும்பு திருமண மண்டபத்தில் இருந்து மாவட்ட அதிமுக அலுவலகத் துக்கு ஊர்வலமாக செல்ல முடிவு செய்திருந்தோம். போலீஸாரின் வேண்டுகோளை ஏற்று, நமது முடிவை மாற்றிக் கொண்டு செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தியிருக் கிறோம்” என்றார்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகம் குறித்து, சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வுசெய்த கோட்டாட்சியர் முருகேசனிடம் கேட்டபோது, “மாவட்ட அதிமுக அலுவலகம் தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ளது. இது குறித்து, கோட்டாச்சியராகிய எனது தலைமையில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் 18-ம் தேதி (நாளை) முற்பகல் 11 மணிக்கு பேச்சுவார்த்தை மற்றும் விசாரணை நடைபெறும்.
இதுதொடர்பாக சி.வி.சண்முகம் எம்எல்ஏ மற்றும் மாவட்டச்செயலாளர் பசுபதி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள் ளது. இருவரும், தங்கள் வசம் உள்ள ஆவணங்களை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கும் எண்ணம் இல்லை. விசாரணைக்கு பிறகு முடிவு செய்யப்படும்” என்றார். அதைத்தொடர்ந்து அதிமுக அலுவலகம் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。