




















தீக்காயம் அடைந்த பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளித்த, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையின் மருத்துவக் குழுவினர்.
Updated on
:
1 min read
சென்னை: தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றினர்.
இதுதொடர்பாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் சாந்தாராமன், மருத்துவக் கண்காணிப்பாளர் பாஸ்கர், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் மதிவாணன் ஆகியோர் கூறியதாவது: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த மாதம் தனலட்சுமி என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
மருத்துவமனையில் இருந்த ஒரு உபகரணத்தில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால், குழந்தையின் உடலில் 23 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, குழந்தை மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
அப்போது, குழந்தையின் உடலில் சூடு குறைந்து போயிருந்தது. நாடி மெலிதாக துடித்துக் கொண்டிருந்தது.
துரிதமாக செயல்பட்ட மருத்துவக் குழுவினர், உடனே குழந்தையின் உடலில் ஏற்பட்டிருந்த காயத்தை சுத்தப்படுத்தி, திசு சிகிச்சையும் மேற்கொண்டனர்.
இதன்பிறகு, 4 நாட்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசத்தில் குழந்தை வைக்கப்பட்டது. தீக்காயத்தில் கிருமித் தொற்று இருந்ததால் ஆன்டிபயாடிக் மருந்துகள் தொடர்ந்து 14 நாட்கள் செலுத்தப்பட்டன.
இதற்கிடையே, 3-ம் நாளில் குழாய் மூலம் குழந்தைக்கு தாய்ப்பாலும் கொடுக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக பாலாடை வழியாகவும், நேரடியாகவும் தாய்ப்பால் கொடுக்கப்பட்டது. தினமும் காயத்தை சுத்தப்படுத்தி தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
24 நாட்களில் குழந்தை முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளது. குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。