

























Updated on
:
1 min read
சென்னை: தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக, சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக விஜய், மே 10-ம் தேதி பதவி ஏற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
அவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மேலும், புதிய எம்எல்ஏ.க்களுக்கு பதவிப்பிர மாணம் செய்து வைப்பதற்காக சட்டப்பேரவை தற்காலிக தலைவராக கருப்பையா நியமிக்கப் பட்டார்.
இந்நிலையில் நிரந்தர பேரவைத் தலைவர் பதவிக்கு தவெக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏவான ஜேசிடி பிரபாகர், பேரவைச் செயலாளர் கி.சீனிவாசனிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்போது முதல்வர் விஜய், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த், அருண்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதேபோல், சட்டப்பேரவை துணைத்தலைவர் பதவிக்கு துறையூர் தொகுதி எம்எல்ஏவான ரவிசங்கர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் எதிர்கட்சிகள் சார்பில் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வராததால், பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர், துணைத் தலைவராக ரவிசங்கர் ஆகியோர் இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர் தேர்வு செய்யப்பட்டதும், அவரை அமைச்சர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து பேரவைத் தலைவருக்கான இருக்கையில் அமர வைத்தனர்.
பின்னர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகராக ரவிசங்கர் நியமிக்கப்படுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவை உறுப்பினர்கள் சபநாயகர், துணை சபாநாயகருக்கான வாழ்த்துரைகளை வழங்கி வருகின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。