
























Updated on:
கடலூர்: அணுசக்தி திட்டங்களைச் செயல்படுத்த, இந்திய அணுசக்தி கழகத்துடன் என்எல்சி இந்தியா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. 700 மெகாவாட் திறன் கொண்ட உள்நாட்டு அழுத்தப்பட்ட கனநீர் அணு உலை அடிப்படையிலான அணுசக்தி உலைகளை மேம்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று முன்தினம் (மே 25) என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிரசன்ன குமார் மோட்டு பள்ளி, இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் புவன் சந்திர பதக் மற்றும் இரு நிறுவனங்களின் செயல்பாட்டு இயக்குநர்கள் முன்னிலையில் நெய்வேலியில் கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மின்துறை இயக்குநர் எம்.வெங்கடாச்சலம் மற்றும் இந்திய அணுசக்தி கழகத்தின் தொழில்நுட்பப் பிரிவு இயக்குநர் ராஜேஷ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒத்துழைப்பானது, முன்மொழியப்பட்ட கூட்டு முயற்சி கட்டமைப்பின் மூலம், இந்திய அணுசக்தி கழகத்தின் தற்போதைய மற்றும் வரவிருக்கும் 700 மெகாவாட் அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைத் திட்டங்களில் முதலீட்டு வாய்ப்புகளையும் வழங்குகிறது.
இந்த நிகழ்வில் பேசிய என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி கூறியதாவது: இந்திய அணுசக்தி கழகத்துடனான இந்தக் கூட்டாண்மை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் ஆகும்.
நாட்டின் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதிலும், நிகர பூஜ்ய கார்பன் உமிழ்வை அடைவதற்கான தேசத்தின் உறுதிப்பாட்டுக்கு ஆதரவளிப்பதிலும் அணுசக்தி ஒரு முக்கியப் பங்காற்றும்.
இந்தக் கூட்டு முயற்சியானது, மின்சாரத் துறையில் என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு இருக்கும் விரிவான அனுபவத்தையும், அணுசக்தி துறையில் இந்திய அணுசக்தி கழகத்தின் நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவத்தையும் ஒன்றிணைத்து, நாட்டுக்கு நம்பகமான, நீடித்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அடிப்படை மின் திட்டங்களின் வளர்ச்சிக்கு நிச்சயமாக வழிவகுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இவ்வாறு தெரிவித்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。