
























Updated on:
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி மீண்டும் இணைந்து செயல்படும் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு மீண்டும் கட்சிப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், சி.வி.சண்முகத்துக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வென்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்பட்டனர். மேலும், தவெக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டவர்கள் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன.
அதன்பின்னர், ஒருகட்டத்தில் தனியாக செயல்பட்ட எம்எல்ஏக்கள் பழனிசாமியுடன் இணக்கமானார்கள். அதிலும், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா, ஜெயக்குமார் உள்ளிட்ட 4 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
அதிமுகவில் மீண்டும் இணைந்த வேலுமணி உள்ளிட்டோருக்கு கட்சிப் பொறுப்புகள் வழங்கப்படாததால், அவர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்தச்சூழலில் அவர்களுக்கு கட்சிப் பொறுப்புகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. இன்று அதிமுக பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களாக நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைமை நிலையச் செயலாளராக வரகூர் அருணாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார். அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பணன், எஸ்.பி.சண்முகநாதன், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், கே.சி.வீரமணி, பாலகிருஷ்ண ரெட்டி, எம்எல்ஏ திருத்தணி கோ.அரி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொள்கை பரப்பு இணைச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மணிகண்டன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் தலைவராக ஏடிசி பொன் தனபாலன், செயலாளராக பெல்.இரா.தமிழரசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு மாவட்ட செயலாளர்களும் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட பெரும்பாலானோருக்கு பொறுப்புகள் மீண்டும் வழங்கப்பட்ட நிலையில், சி.வி.சண்முகத்துக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。