


























Updated on
:
1 min read
சென்னை: ‘துணை முதல்வராக இருந்த நீங்கள், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக பதவி இறக்கம் செய்யப்பட்டதற்கு சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசி, இந்துக்களின் நீங்கா வெறுப்பை சம்பாதித்துக் கொண்டதே காரணம்’ என உதயநிதி ஸ்டாலினை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்து மதத்தின் மீது உங்களுக்குள்ள அதீத வெறுப்பே, உங்கள் சரிவுக்கு வழிவகுக்கும் உதயநிதி ஸ்டாலின். உங்கள் முதல் சட்டப்பேரவை உரையிலேயே கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையான சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என நீங்கள் பேசியிருப்பது, அரசியல் ரீதியாக நீங்கள் இன்னும் பக்குவப்படவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. இந்துக்களின் மீது தொடர்ந்து நீங்கள் கல்லெறிவது கடும் கண்டனத்துக்குரியது.
துணை முதல்வராக இருந்த நீங்கள், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக பதவி இறக்கம் செய்யப்பட்டதற்கு ‘சனாதனத்தை ஒழிப்பேன்’ என்று நீங்கள் ஒருமுறை பொதுவெளியில் பேசி, இந்துக்களின் நீங்கா வெறுப்பை சம்பாதித்துக் கொண்டதே காரணம்.
எனவே, நீங்கள் அரசியலில் மென்மேலும் வளர வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது உங்களுக்குள்ள வெறுப்புணர்வை வெட்டி எறிந்துவிட்டு, உண்மையான மதநல்லிணக்கத்தைப் போற்றுவது அவசியம்.
இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் அவரவர் மத அடையாளங்களும் நம்பிக்கைகளும் அதிமுக்கியம் என்பதை நீங்கள் இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு இந்துக்களின் நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தி, "மத" யானையின் மீது அரசியல் சவாரி செய்ய முயன்றால் மீள முடியா பாழுங்குழியில் வீழ்வீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும், அனைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைத்திருக்கும் முதல்வர் விஜய், சட்டப்பேரவையில் பகிரப்பட்ட இந்த வெறுப்புப் பிரச்சாரத்துக்கு என்ன எதிர்வினையாற்றப் போகிறார் என்பதைத்தான் தமிழகம் தற்போது ஆவலாக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。