























எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்.
Updated on
:
1 min read
சென்னை: “அதிமுகவின் பொதுச்செயலாளர் பழனிசாமியால் நியமிக்கப்பட்ட கொறடா உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக எம்எல்ஏவுக்கும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், எம்எல்ஏ பதவி பறிபோகும்’ என அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், எம்.பியுமான இன்பதுரை எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினருக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் தடை சட்டம் நிச்சயமாக பொருந்தும்.
சட்டப்பேரவையில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது கட்சித் தாவலாகவே கருதப்படும். சிலர் தனி அணியாக செயல்படுவதாலோ அல்லது பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறுவதாலோ, அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது. அது சட்டப்படி செல்லாது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மிகத் தெளிவாக வழங்கிய தீர்ப்பின்படி: “ஒரு அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமைதான் சட்டப்பேரவை கொறடாவை நியமிக்க முடியும்; சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாமாக ஒன்று கூடி கொறடாவை நியமிக்க முடியாது.” மேலும், உச்ச நீதிமன்றம் “சட்டப்பேரவைக் கட்சி” மற்றும் “அரசியல் கட்சி” இரண்டும் வேறு எனவும், அரசியலமைப்பு சட்டத்தின் 10 வது அட்டவணை “அரசியல் கட்சியை” தான் அங்கீகரிக்கிறது எனவும் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைமையான பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் நியமித்துள்ள கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவே சட்டபூர்வமானது ஆகும். எனவே, அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக எம்எல்ஏவுக்கும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், எம்எல்ஏ பதவி பறிபோகும் என்பதே சட்ட நிலை’ எனத் தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。