






















Updated on
:
1 min read
கொச்சி: இந்தியாவின் கடல் மீன் உற்பத்தி கடந்த 2025-ம் ஆண்டில் 3 சதவீதம் அதிகரித்து 35.7 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இதில் குஜராத் மாநிலத்தைப் பின்னுக்குத் தள்ளி தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இது குறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவனம் நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஆண்டில் 6.85 லட்சம் டன் மீன் உற்பத்தியுடன் தமிழகம் நாட்டின் முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது. இதற்கு முன்பு முதலிடத்தில் இருந்த குஜராத், மோசமான வானிலை மற்றும் புயல் பாதிப்புகள் காரணமாக 15 சதவீத சரிவைச் சந்தித்து இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. கேரளம் 6.24 லட்சம் டன் உற்பத்தியுடன் (2 சதவீத உயர்வு) மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.
அதிகம் பிடிக்கப்பட்ட மீன்
கர்நாடகா 44 சதவீதமும், மகாராஷ்டிரா 18 சதவீதமும் மீன் உற்பத்தியில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. தேசிய அளவில் கானாங்கெளுத்தி 2.70 லட்சம் டன்களுடன் அதிகம் பிடிபட்ட மீன் வகையாக முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கணவாய் மீன்கள் (2.57 லட்சம் டன்) மற்றும் மத்தி மீன்கள் (2.53 லட்சம் டன்) ஆகியவை உள்ளன. கேரளத்தைப் பொறுத்தவரை மத்தி மீன்கள் 1.68 லட்சம் டன் பிடிபட்டு சாதனை அளவு எட்டப்பட்டுள்ளது.
பொருளாதார மதிப்பு
நாடு முழுவதும் பிடிபட்ட மீன்களின் மொத்த மதிப்பு விற்பனை மையங்களில் ரூ.69,254 கோடியாகவும், சில்லறை விற்பனை சந்தையில் ரூ.97,702 கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட முறையே 10.45% மற்றும் 8.43% அதிகம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。