


























Updated on:
சென்னை: மாநகராட்சி கூட்ட அரங்கில் காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு என்று தனி இருக்கை வசதி செய்து தர வேண்டும் என, சென்னை மாநகராட்சி காங்கிரஸ் குழுத் தலைவர் சாமுவேல் திரவியம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் முன்மொழிந்த பல திட்டங்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்தாமல் தாமதப்படுத்தி வருகிறது.
இந்த தாமதத்தால் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். எனவே, விடுபட்ட அனைத்துப் பணிகளையும் அடுத்த சில மாதங்களுக்குள் போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சிக்கு என்று இருந்த தனித்துவமான சிசிஎம்சி சட்டம் ரத்து செய்யப்பட்டதால், சென்னை தனது பிரத்யேகத் தன்மையை இழந்து வருகிறது.
சென்னை நகரின் கட்டமைப்பு, பிரச்சினைகள் குறித்துப் போதிய அனுபவமும், நிபுணத்துவமும் வாய்ந்த சென்னை மாநகராட்சி ஊழியர்கள் பலர் பிற நகரங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் பருவமழை உள்ளிட்ட பேரிடர் காலத் தயாரிப்புப் பணிகளில் சில பகுதிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த புதிய சட்ட விதிகளின் தாக்கம் குறித்து அரசு முறையான ஆய்வு நடத்த வேண்டும்.
மாநகராட்சி கூட்ட அரங்கில் காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு என்று தனி இருக்கை வசதி செய்து தரப்பட வேண்டும். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 6 அமைச்சர்களும், அனைத்து எம்எல்ஏக்களும் இக்கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.
கடந்த திமுக ஆட்சியின்போது வார்டு குழுக்கள் மற்றும் கவுன்சிலர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. தற்போதைய அரசு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மக்களுக்காகத் திறம்படப் பணியாற்ற ஏதுவாக, வார்டு குழுக்கள் மற்றும் கவுன்சிலர்களின் பழைய அதிகாரங்களை உடனடியாக மீட்டெடுத்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。