























Updated on
:
2 min read
சென்னை: தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை ஆளுநர் மாளிகையில் சந்தித்து, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை பிற்பகல் 3.30 மணி அளவில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவருடன் செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.
விஜய்யை வரவேற்ற ஆளுநர் அர்லேகர், அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தார்.
பதவியேற்பு விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை காலை 11.30 மணி அளவில் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முதல்வராக விஜய் நாளை பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.
அவருடன் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். அமைச்சரவையில் செங்கோட்டையன், ஜேசிடி. பிரபாகர், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர். நிர்மல்குமார், மரிய வில்சன், ராஜ்மோகன், அருண்ராஜ், சத்தியபாமா, விஜயலட்சுமி, ஸ்ரீநாத் உள்ளிட்டோர் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவை விஜய் கோரி இருந்தார். காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளிலும், சிபிஐ, சிபிஎம், விசிக ஆகியவை தலா 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால், இக்கட்சிகள் இணைந்தால் பெரும்பான்மையை எளிதில் பெற முடியும்.
விஜய்யின் கோரிக்கையை ஏற்று, தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்தது. இது தொடர்பாக அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவை வழங்குமாறு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு தவெக தலைவர் விஜய் முறைப்படி கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்று, தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு முழு ஆதரவை வழங்க காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. எந்தவொரு வகுப்புவாத சக்தியையும் இந்தக் கூட்டணியில் சேர்க்காமல் தமிழக வெற்றி கழகம் விலக்கி வைப்பதை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆதரவு வழங்கப்படுகிறது.
இரு கட்சிகளுக்கும் இடையிலான பரஸ்பர மரியாதை, அவரவர்க்கு உரிய பங்கு, கூட்டுப் பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த இந்தக் கூட்டணி, தற்போதைய அரசாங்கத்தை அமைப்பதற்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகள், மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தல்களிலும் தொடரும்” என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராஜேஷ் குமார், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் விஜய்யை பனையூர் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகள் தவெக கூட்டணியில் இணைவது குறித்து தங்கள் கட்சியினருடன் ஆலோசித்து தெரிவிப்பதாக கூறியுள்ளனர். அதிமுக தரப்பிலும், விஜய்க்கு ஆதரவு அளிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。