
























Updated on:
சென்னை: வாகனப் பதிவில் சிறப்பு எண் பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
புதிதாக வாகனம் வாங்குவோர் அதை அவர்களின் முகவரிக்கு உட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். புதிய வாகனங்களை பதிவு செய்யும்போது அந்த வட்டார போக்குவரத்து அலுவலகம் அந்த வாகனத்துக்கு என பதிவு எண் ஒன்றை வழங்கும்.
இந்த பதிவு நடைமுறையில் பதிவுக் கட்டணம் மற்றும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் வாகனப் பதிவு எண்ணாக வட்டார போக்குவரத்து அலுவலகம் ஒதுக்கும் எண்ணே கிடைக்கும்.
வாகன உரிமையாளர்கள் தங்களுக்குப் பிடித்த எண் வேண்டும் என்றால் அதற்கான கூடுதல் கட்டணம் செலுத்தி ‘பேன்சி எண்’ என கூறப்படும் அந்த சிறப்பு எண்களை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த சிறப்பு பதிவு எண்களை பெறுவதற்கான கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு அறிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அரசால் ஒதுக்கப்படும் முன்பதிவு, பதிவு எண்களுக்கு, தற்போதைய வரிசை மற்றும் அடுத்த மூன்று வரிசைகளுக்கு, ரூ.40 ஆயிரம் கட்டணம் இருக்கும் நிலையில், வரைவு அறிக்கையில் ரூ.80 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல 5 முதல் 8-வது வரிசைக்கு ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சம் என இரு மடங்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 13 மற்றும் 14-வது வரிசைக்கான சிறப்பு எண்களை பெற ரூ.8 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு, வாகனத்தின் மதிப்பை அடிப்படையாக வைத்து ரூ.2,000 முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.50 ஆயிரம் மதிப்புடைய வாகனத்துக்கு ரூ.2 ஆயிரமும், ரூ.30 லட்சம் மதிப்புடைய வாகனங்களுக்கு ரூ.1 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கார் மற்றும் பிற வாகனங்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1.50 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு அறிக்கை குறித்த கருத்துகளை ஜூலை 3-ம் தேதிக்குள் உள்துறை செயலாளருக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。