



























Updated on
:
2 min read
சென்னை: வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக இன்று வழக்கமான 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 3,184 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 5,276 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் சென்னை போன்றபெருநகரங்களில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் தகவல் தொழில்நுட்பத் துறை உட்பட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
கல்லூரிகளிலும் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் இவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக, போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஏப்.21-ம் தேதி முதல் இயக்கம்: சென்னையில் இருந்து கடந்த 21-ம் தேதி வழக்கமான 2,092 பேருந்துகள், கூடுதலாக 1,339 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,431 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1.89 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். 22-ம் தேதி முதல் 23-ம் தேதி நண்பகல் 12 மணி வரை, வழக்கமான 3 ஆயிரம் பேருந்துகள், கூடுதலாக 4,206 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 7,206 பேருந்துகள் இயக்கப்பட்டு, 4.38 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர்.
அந்த வகையில், தேர்தலை கருத்தில் கொண்டு 21-ம் தேதி முதல் 23-ம் தேதி மதியம் 12 மணி வரை இயக்கப்பட்ட பேருந்துகளில் 6.26 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். இதற்கிடையே, வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான 22-ம் தேதி இரவு லட்சக்கணக்கான மக்கள் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். அன்று மதியம் முதல் மாலை வரை பேருந்துகள் இயக்கம் சீராக இருந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதி அடைந்தனர்.
பேருந்து நிலையத்துக்குள் நுழையும் பேருந்துகளில் முண்டியடித்து ஏறினர். நீண்ட நேரம் காத்திருந்ததால் அதிருப்தி அடைந்தவர்கள் அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
வாகன நெரிசலால் தாமதம்: சாலையில் வாகன நெரிசல் அதிகமாக இருந்ததால் திட்டமிட்டபடி பேருந்துகளை இயக்க முடியவில்லை என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருந்தபயணிகளை அதிகாரிகள் சமாதானம் செய்து, சில மணி நேரத்தில் பேருந்துகளை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.
23-ம் தேதி காலை வரை சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. அதேபோல, பூந்தமல்லி, மாதவரம் பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்கும் போதிய பேருந்துகள் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். பகல் 12 மணி அளவில் நிலைமை சீரடைந்தது.
இந்நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை மற்றும் பிற நகரங்களுக்கு திரும்ப வசதியாக 14,508 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,295 பேருந்துகளும், மற்ற பகுதிகளில் 2,500 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
அதேபோல, இன்று சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 3,184 சிறப்பு பேருந்துகளும், மற்ற பகுதிகளுக்கு இடையே 3,345 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. வாக்களிப்பதற்காக சென்றவர்கள் மட்டுமின்றி, வாரக் கடைசி நாட்களில் மற்றவர்களும் பயணம் மேற்கொள்வார்கள் என்பதால் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகரிப்பு: வாக்குப்பதிவுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பும் நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் இல்லாதபேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.2,400 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.2,800 வரை வசூலிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனப் பேருந்துகளில் அதிகபட்சமாக ரூ.2,700 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.3,200 வரையும், மதுரையில் இருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.2,200 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.2,400 முதல் ரூ.3ஆயிரம் வரையும், கோவையில் இருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.2,400 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.2,800 முதல் ரூ.3,200 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
குடும்பத்துடன் பயணம் செய்யும் நடுத்தர மக்கள் இதனால் அதிக சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து துறையும், ஆம்னி பேருந்து சங்கமும் இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறிவரும் நிலையில், சூழ்நிலையைப் பயன்படுத்தி சில தனியார் பேருந்து நிறுவனங்கள் தொடர்ந்து அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து நிறுவனங்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைக்கேற்ப கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。