

























Updated on:
சென்னை: தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையும் சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது ஆதரவைப் பெற விஜய் திட்டமிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலமான 118 இடங்களைப் பெறாததால், தமிழகத்தில் தற்போது ‘தொங்கு சட்டப்பேரவை’ அமையும் சூழல் உருவாகியுள்ளது.
ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படுவதால், கட்சிகளிடம் ஆதரவு கோருவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது தவெக முன்பு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, அதிமுகவின் ஆதரவைக் கோருவது. மற்றொன்று, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை கோருவது.
அதிமுக தலைமையிலான கூட்டணி 53 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஒருவேளை அதிமுக ஆதரவு அளித்தால் தவெக மிக எளிதாக ஆட்சி அமைக்க முடியும். ஆனால், பிரச்சாரத்தின்போது அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை விஜய் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்தச் சூழலில், தற்போது பழனிசாமி ஆதரவு அளிப்பாரா என்பது தெரியவில்லை.
மற்றொருபுறம், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவைப் பெறவும் விஜய் திட்டமிட்டு வருகிறார்.
இதற்கிடையே, தவெகவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தொலைபேசி வாயிலாக விஜய்யைத் தொடர்பு கொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
காங்கிரஸ் மட்டுமின்றி, திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக ஆகியவற்றுடனும் பேச்சுவார்த்தை நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. பாமக தரப்பில் இருந்து இதுவரை சாதகமான பதில் வராததால், திருமாவளவன் தலைமையிலான விசிகவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கவும் விஜய் தரப்பு ஆர்வம் காட்டி வருகிறது.
தேர்தலுக்கு முன்பு, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு ‘ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு’ என்று விஜய் கூறிவந்தார். அந்த எதிர்பார்ப்புடன் விஜய்க்கு ஆதரவு அளிக்கப்போவது யார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。