










Updated on
:
1 min read
சென்னை: இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் கழகம் (The Institute of Chartered Accountants of India - ICAI) சார்பில் ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழா நடைபெறும். அப்போது, புதிதாக தகுதி பெறும் பட்டயக் கணக்காளர்களுக்கு உறுப்பினர் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்படும்.
அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா சென்னை உட்பட நாட்டின் 23 முக்கிய நகரங்களில் நேற்று நடத்தப்பட்டது. இதில், நாடு முழுவதிலும் புதிதாக தகுதி பெற்ற 9,057 பட்டயக் கணக்காளர்களுக்கு உறுப்பினர் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற சி.ஏ. தேர்வுகளில் தேசிய அளவில் தரவரிசை பெற்ற சாதனையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
பட்டமளிப்பு விழாவின் தொடக்க நிகழ்வுகள், மும்பையில் நடைபெற்றன. இதில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் சல்லா நிவாசுலு செட்டி முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஐசிஏஐ தலைவர் பிரசன்ன குமார் புதிய பட்டயக் கணக்காளர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். ஐசிஏஐ துணைத் தலைவர் மங்கேஷ் பாண்டுரங்க் கினாரே உரையாற்றினார். இந்த நிகழ்வுகள், அனைத்து மையங்களிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், சென்னை, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 450 புதிய பட்டயக் கணக்காளர்களுக்கு உறுப்பினர் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஐசிஏஐ மத்திய கவுன்சில் உறுப்பினரும், பட்டமளிப்பு விழா ஒருங்கிணைப்பாளருமான ராஜேந்திர குமார் மற்றும் மத்திய கவுன்சில் உறுப்பினர் ஸ்ரீப்ரியா ஆகியோர் தேர்வுகளில் தரவரிசை பெற்ற 10 உறுப்பினர்களைப் பாராட்டி, சான்றிதழ்களை வழங்கினர். இந்த நிகழ்வில் ஐசிஏஐ அமைப்பின் தெற்கு மண்டல கவுன்சில் (எஸ்ஐஆர்சி) உறுப்பினர்கள் அபிஷேக், ரேகா உமா சிவ் கலந்து கொண்டனர்.
此內容由慣性聚合(RSS閱讀器)自動聚合整理,僅供閱讀參考。 原文來自 — 版權歸原作者所有。