























Updated on
:
2 min read
சென்னை: சட்டப்பேரவையில் நடைபெற்ற பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வர் விஜய்யின் தவெக அரசு வெற்றி பெற்றது.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 108 தொகுதிகளை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க மொத்தம் 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையி்ல், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 13 உறுப்பினர்களின் ஆதரவைத் தவெக பெற்றது. இதையடுத்து 13-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அர்லேகர் தெரிவித்தார்.
கடந்த 10-ம் தேதி தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, ஆளுநர் அறிவுறுத்தலின்படி, சட்டப்பேரவையில் விஜய்யின் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் கேட்டுக்கொண்டபடி. நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.
தொடர்ந்து, எஸ்.ராஜேஷ் குமார் (காங்கிரஸ்), ஆர்.செல்லசுவாமி (மார்க்சிஸ்ட்), வன்னியரசு (விசிக), அ.மு.ஷாஜகான் (ஐயூஎம்எல்), அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.காமராஜ் (சுயேச்சை), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் அரசுக்கு ஆதரவாக பேசினர்.
பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக), தமிமுன் அன்சாரி (மஜக), நித்தியானந்தன் (கொமதேக), ஜவாஹிருல்லா (மமக) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். போஜராஜன் (பாஜக), சவுமியா அன்புமணி (பாமக) ஆகியோர் நடுநிலை வகிப்பதாக தெரிவித்தனர்.
முன்னாள் முதல்வர் பழனிசாமி, அதிமுக எம்எல்ஏக்கள் 2 அணிகளாக செயல்பட்டு வருவதை குறிப்பிட்டு, அரசுக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, அதிமுகவின் சி.வி.சண்முகம் தரப்பில் எஸ்.பி.வேலுமணி பேச வாய்ப்பு தரப்பட்டது. அதற்கு பழனிசாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பேரவைத் தலைவர் அனுமதி அளித்ததை அடுத்து, வேலுமணி அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘பெரும்பான்மை மக்கள் தவெகவுக்கு வாக்களிக்கவில்லை’ என்று பேசியதுடன், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். திமுகவுடன் தேமுதிக, மஜக, கொமதேக, மமக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து முதல்வர் விஜய் பேசும்போது, ‘‘இந்த அரசு நிச்சயம் மதச்சார்பற்ற அரசாகத்தான் செயல்படும். குதிரை பேரத்தில் இந்த அரசு ஈடுபடவில்லை. குதிரை வேகத்தில் செயல்படுகிறது. தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு உழைத்த தலைவர்கள் வழிகாட்டிய கொள்கைகளில் இருந்து இம்மியளவும் விலகாமல் இந்த ஆட்சி நடைபெறும். எனவே, நான் முன்மொழிந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் ஏகமனதாக நிறைவேற்றித் தரவேண்டும்’’ என்றார்.
இதையடுத்து, பிரிவு வாரியாக உறுப்பினர்களை எழுந்து நிற்கச்செய்து, ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள், நடுநிலை வகிப்பவர்கள் என எண்ணிக் கணிக்குமாறு பேரவைச் செயலர் கி.சீனிவாசனுக்குப் பேரவைத் தலைவர் அறிவுறுத்தினார்.
அதன்படி, பிரிவு வாரியாக உறுப்பினர்கள் எண்ணிக் கணிக்கப்பட்டனர். உறுப்பினர்களை எழுந்து நிற்கக்கூறி, பெயர் வாசிக்கப்பட்டு அவர்கள் நிலைப்பாடு கணக்கில் கொள்ளப்பட்டது.
இதையடுத்து, வாக்கெடுப்பு விவரத்தை பேரவைத் தலைவர் அறிவித்தார். அதன்படி, 144 உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவளிப்பதாகவும், 22 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததாகவும், 5 உறுப்பினர்கள் நடுநிலை வகித்ததாகவும் அறிவித்தார். இதன்மூலம் வாக்கெடுப்பில் தவெக அரசு பெரும்பான்மை பெற்றுள்ளதாகவும் அறிவித்தார். இதையடுத்து, அனைத்து உறுப்பினர்களுக்கும் முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。