
















Updated on:
இத்தாலி சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் மெலோனிக்கு மெலோடி சாக்லெட் பரிசளித்தார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ள நிலையில், மோடியின் செயலுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “இந்தியர்கள் தலைக்கு மேலேயே ஒரு பொருளாதார சூறாவளி சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ இத்தாலியில் மிட்டாய் விநியோகித்துக் கொண்டிருக்கிறார்.
இங்கே விவசாயிகளும், இளைஞர்களும், பெண்களும், தொழிலாளர்களும், சிறு வணிகர்களும் கண்ணீர் வடிக்கின்றனர். அங்கே பிரதமர் மோடி சிரித்துக் கொண்டு ரீல்ஸ் எடுக்கிறார். பாஜகவினர் அதற்கு கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். இது தலைமைப் பண்பு அல்ல. மாறாக அதை கேலிக்கூத்தாக்கும் செயல்” என்று கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, இறுதியாக செவ்வாய்க்கிழமை மாலை ரோம் நகர் சென்றடைந்தார். அங்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்துப் பேசினார். இருவரும் இணைந்து இரவு உணவு சாப்பிட்டனர்.
இது தொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, "ரோம் நகரில் தரையிறங்கியதும், பிரதமர் மெலோனியை இரவு உணவின்போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற கொலோசியம் அரங்குக்குச் சென்றோம்" என்று பதிவிட்டுள்ளார்.
இரு தலைவர்களும் ரோம் நகரின் வீதிகள் வழியாக ஒரே காரில் பயணித்ததைக் காண முடிந்தது. முன்னதாக, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி பிரதமர் மோடியை சமூக ஊடகங்களில் அன்புடன் வரவேற்றார். அவருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, "ரோம் நகருக்கு வருக, என் நண்பரே!" என்று எழுதியுள்ளார்.
பிரதமர் மோடி பகிர்ந்துள்ள ஒரு புகைப்படத்தில், இரு தலைவர்களும் இரவில் கொலோசியம் அரங்குக்குள் அருகருகே நிற்பதைக் காண முடிகிறது. மென்மையான விளக்கொளியில் ஒளிரும் அந்தப் பழமையான ரோமானிய அரங்கின் பின்னணியில், இரு தலைவர்களும் வரலாற்றுச் சின்னத்தைப் பார்த்தவாறு நீண்ட நேரம் உரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
மெலோனிக்கு பரிசளித்த மோடி
இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடி ஜார்ஜியா மெலோனிக்கு 'பார்லே மெலோடி' டாபிகள் (சாக்லெட்) அடங்கிய ஒரு பாக்கெட்டைப் பரிசாக வழங்கினார்.
இதையடுத்து, மெலோனி எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், "பிரதமர் மோடி எனக்கு ஒரு மிக மிகச் சிறந்த டாபியைப் பரிசாகக் கொண்டு வந்தார் - அதுதான் மெலோடி" என்று மெலோனி கூறியுள்ளார். அந்த வீடியோவின் தலைப்பில், 'பரிசுக்கு நன்றி' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, “தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடுகளுக்குச் செல்லாதீர்கள், மின்சார வாகனங்களைப் பயன்படுத்துங்கள்” என்று நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு கூறி இருக்கிறார். இவற்றைக் கூறிய மோடி, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தில் ஏறி வெளிநாடுகளுக்குச் செல்கிறார். இதையெல்லாம் பொதுமக்கள் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர். நாட்டில் ஒரு பொருளாதார புயல் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கடுமையான பணவீக்கம் ஏற்படும், அனைத்துப் பொருட்களின் விலைகளும் விண்ணைத் தொடும். அதோடு, உரங்களுக்கு தட்டுப்பாடும் ஏற்படும்.
வர இருக்கும் காலங்கள் மிகவும் கடினமானவையாக இருக்கப் போகின்றன. நாடு இதுவரை கண்டிராத அளவுக்கு விலைவாசி உயர்வு ஏற்படப் போகிறது. அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும். நாட்டில் உரத் தட்டுப்பாடு ஏற்பட இருப்பதால், விவசாயிகள் பெரும் துயரத்துக்கு ஆளாவார்கள். எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபடும். ஆனால், இந்த பொருளாதார புயலின் தாக்கம் அதானி, அம்பானி, மோடி ஆகியோரை சிறிதும் பாதிக்காது. அவர்கள் தங்கள் ஆடம்பர மாளிகைக்குள்ளேயே பாதுகாப்பாக இருப்பார்கள். இந்த பொருளாதாரப் புயலால் பாதிக்கப்படப் போவது ஏழை எளிய மக்கள்தான்” என்று ராகுல் காந்தி காட்டமாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。