






























Updated on:
மதுரை: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கோயில் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை நாளான கடந்தாண்டு டிச.3-ல் தீபம் ஏற்றக்கோரி மதுரை எழுமலையை சேர்ந்த ராம ரவிகுமார் உள்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தனர். இதை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என டிச.1-ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஆட்சியர், காவல் ஆணையர், செயல் அலுவலர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாததற்காக வருத்தம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரதான மனு மீதான தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக அரசு தரப்பிலும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு எதிராக அதிகாரிகள் தரப்பிலும் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை விசாரித்த முந்தைய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை நாளில் தீபத்தூணிலும் கோயில் நிர்வாகம் சார்பில் தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த ஜனவரி 6-ம் தேதி உத்தரவிட்டது. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை அதிகாரிகள் சந்திக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த மனுக்கள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது.
இந்த உத்தரவால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. உத்தரவை செயல்படுத்துவதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது. இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், ஏன் இன்னும் நீட்டிக்க விரும்புகிறீர்கள், அனைத்து தரப்பும் சமரசமாகப் பேசி திருப்பரங்குன்றம் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். திருப்பரங்குன்றத்தில் வசிக்கும் மக்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவர்கள் அங்குதான் வசிக்கின்றனர். அவர்களுக்குத்தான் கள நிலவரம் தெரியும். மதநல்லிணக்கம் முக்கியம். இதனால் இருதரப்பினரையும் ஒன்றாக அமர்ந்து சமரசம் பேசி ஒரு தீர்வை எட்டச் செய்யுங்கள். இதை ஏன் இருதரப்பு வழக்கறிஞர்களும் பரிசீலிக்கக் கூடாது எனக் கேட்டனர். தமிழக அரசு தரப்பில், உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக்கூடாது என்பது நோக்கம் அல்ல. நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருக்கும் முறையை தொடர்வதா புதிய முறையை தொடர்வதா என முடிவெடுக்க வேண்டியுள்ளது.
தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கோயில் நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்றும், பிரதான மனுதாரர் தரப்பில், இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில் பக்தர்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் இருக்கும் சில பகுதிகளை நீக்கக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து விசாரணையை ஜூலை 27-க்கு தள்ளி வைத்தும், நீதிமன்ற அவமதிப்பு நவடிக்கைக்கான தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。