























தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தவெக 108 இடங்களில் வென்ற நிலையில், கடந்த மே 10-ம் தேதி முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவளித்த சி.வி.சண்முகம் தரப்பு எம்எல்ஏ.க்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பழனிசாமி தரப்பில், பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 பேர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தனர். சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மன்னிப்பு கடிதம் கொடுத்த நிலையில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 4 பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத் தலைவரிடம் பழனிசாமி தரப்பு சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், பேரவைத் தலைவரை தலைமைச் செயலகத்தில் சந்தித்த சி.விஜயபாஸ்கர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக பேரவைத் தலைவரும் அறிவித்துள்ளார். “தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால், நான் உயிராய் நேசித்த இயக்கம் வேதனைகளையும், சோதனைகளையும் எதிர்கொள்ளும் நிலை உருவாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில், கனத்த இதயத்துடன் இயக்கத்திலிருந்து விடைபெற்றாலும், என் மண்ணுக்கான, மக்களுக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பு வழக்கம்போல் தொடரும்” என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், எம்பிபிஎஸ் படிக்கும்போது அதிமுகவில் மாணவர் அணியில் இருந்தார். அதன் பிறகு, 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், தொகுதி மறுசீரமைப்பின் மூலம் விராலிமலை தொகுதி உருவானதைத் தொடர்ந்து, அத்தொகுதியில் 2011-ல் இருந்து 2026 வரை நடைபெற்ற 4 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுக ஆட்சியில் இரண்டு முறை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டபோது, சி.விஜயபாஸ்கருக்குப் பதிலாக வி.பழனிவேல் அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, விரக்தியில் இருந்த விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி அளவிலும், மாவட்ட அளவிலும் தனது ஆதரவாளர்களைத் திரட்டி அரசியலில் அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து ஆலோசித்து வந்தார். அப்போதும், தொகுதியில் நன்றி தெரிவிப்புக் கூட்டத்தின்போதும் அதிமுகவின் சின்னம், தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வந்தார்.
எனினும், கட்சித் தலைமையையும் நேரடியாக விமர்சிக்காமல் இருந்து வந்தார். ஆனால், விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் 3 பேரை கட்சிப் பதவியில் இருந்து நீக்கி பழனிசாமி அண்மையில் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கட்சியின் தலைமையை மறைமுகமாகச் சாடிவந்ததும் கவனிக்கத்தக்கது. இதற்கிடையே, ஜூன் 22-ம் தேதி முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா பனையூரில் நடைபெற உள்ளது. அன்று தவெகவில் விஜயபாஸ்கர் இணைவார் என கூறப்படுகிறது.
தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காக கூட்டத்துடன் கூட்டமாக ராஜினாமா செய்யாமல் தனி ஆளாக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறாராம் விஜயபாஸ்கர். இதனிடையே, தனது விராலிமலை தொகுதி மட்டுமின்றி, புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் நெருக்கமான டச்சில் இருக்கிறாராம் விஜயபாஸ்கர். அதேபோல், விராலிமலை தொகுதியில் இடைத்தேர்தலுக்காக முன்தேதியிட்ட கவனிப்பு வேலைகளையும் விஜய்பாஸ்கர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவில் இருந்து விலகவுள்ளதை அறிந்ததும், விஜயபாஸ்கரை திமுக தரப்பில் இருந்தும் அணியிருக்கிறார்களாம். ஆனால், அவர் யாருக்கும் பிடிகொடுக்கவில்லையாம். அதேசமயம், தவெக தரப்பில் பேசிய விஜயபாஸ்கர் தரப்பு, “தேர்தலுக்கான செலவுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆனால், ஜெயித்து வந்ததும் அமைச்சர் பதவி தேவை” என்று கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு தவெக தரப்பில் கிரீன் சிக்னல் கிடைத்த பிறகே அந்தப் பக்கம் விஜயபாஸ்கர் சாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
விஜயபாஸ்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏ.க்களின் பலம் 42 ஆகக் குறைந்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。