


























Updated on:
சென்னை: ‘விவசாயிகளுக்கான பயிர்க் கடன் ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. 2025, மே 1-ம் தேதி முதல் 2026, பிப்.28-ம் தேதி வரை கடன் பெற்றவர்களுடைய கடன்கள் மட்டுமே தள்ளுபடி என்பதும் முற்றிலும் அநீதியானது, பாரபட்சமானது’ என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு பயிர்க் கடனை ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி தமிழக முதல்வர் விஜய் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது அறிவிப்பு தொடர்பாக விவசாயிகள் பகிர்ந்த கருத்துகள்:
கணபதியக்ரஹாரம் முன்னோடி விவசாயி சீனிவாசன்: “தமிழக அரசு விவசாயிகளுக்கான வேளாண்மை கடனை ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி என்று அறிவித்துள்ளது. இருந்தபோதிலும் இந்த அறிவிப்பும் விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கர் வரை முழு தள்ளுபடியும், 5 ஏக்கருக்கு மேல் 50 சதவீதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக இப்போது 2-வது அறிவிப்பு கிடைக்கப்பட்டுள்ளது. இதுவும் விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை அளிக்கிறது.
5 ஏக்கர் விவசாயம் செய்தால் கடன் உச்சவரம்பு நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் ஆகும். 2 லட்சம் வரை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் கரும்பு, வாழை, பருத்தி போன்ற பயிர்களுக்கு பயிருக்கு ஏற்றார்போல் பயிர்க் கடன் உச்சவரம்பு மாறுபடும். ஆகையால், இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இதனால், புதிதாக கடன் வாங்க விவசாயிகளுக்கு வாய்ப்பு இல்லை.
தேர்தல் வாக்குறுதிகள் கூறியபடி, அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்துவிட்டு புதிதாக கடன் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதற்குரிய அறிவிப்புகளை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். தற்போதைய நிலையில் மிகக் குறைவான அளவில் மட்டுமே விவசாயிகள் பயனடைவார்கள். புதிய கடன் பெற இயலாது. இதில் குழப்பம் அதிகமாக இருக்கும்” என்றார் அவர்.
சுவாமிமலை சுந்தர விமலநாதன்: “தமிழக முதல்வர் விஜய் கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ.75 ஆயிரம் வரை கடன் பெற்ற உழவர்களுக்கு தள்ளுபடி உண்டு என்று அறிவித்திருக்கிறார்கள். இது எவ்விதத்திலும் போதுமானது அல்ல. இந்த அறிவிப்பையும் மீண்டும் மறுபரிசீலனை செய்து கடன் தள்ளுபடி செய்திட வேண்டும்.
அரசிடம் நிதி பற்றாக்குறை இருக்குமேயானால் ஏற்கெனவே பெற்றுள்ள கடன்களை மத்திய கால மாற்றுக் கடன்களாக மாற்றி அமைப்பதற்கு, ஏற்கெனவே உள்ள முன்னுதாரணங்களை கடந்த கால நடைமுறையை அரசு பின்பற்றி கடன் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறான கடன் தள்ளுபடி செய்வது குறித்து உழவர் பிரதிநிதிகளோடு கலந்து ஆலோசித்து சாத்தியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்திருக்க வேண்டும்.
2025 மே 1-ம் தேதி முதல் 2026 பிப். 28-ம் தேதி வரை கடன் பெற்றவர்களுடைய கடன்கள் மட்டுமே தள்ளுபடி என்பதும் முற்றிலும் அநீதியானது, பாரபட்சமானது, ஏற்கத்தக்கதல்ல, தவறானதும் கூட.
எனவே, மத்திய அரசிடம் இருந்து வட்டி இல்லா கடனாக ரூ.12 ஆயிரம் கோடி பெற்று தமிழக உழவர்களின் கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார் அவர்.
நெய்குப்பை விவசாயி கலைமணி: “தமிழக முதல்வர் விஜய்யின் அறிவிப்பு பயனற்றதாகும். 2025 மே 1-ம் தேதிக்கு முன் கடன் பெற்ற பல லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு கடன்கள் தள்ளுபடி செய்யாமல் உள்ளன. புதிய அறிவிப்பால் இவர்களுக்கு விடிவு காலம் ஏற்படப்போவது இல்லை. இதனால் விவசாயிகள் புதிய கடன்கள் வாங்க முடியாமலும், பழைய கடன் தள்ளுபடி ஆகாமலும் உள்ளன. இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பலன் அளிக்கக்கூடிய அறிவிப்பாக இல்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகளின் நிலை கேள்வி குறியாகி உள்ளது” என்றார் அவர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。