
































Updated on:
புதுடெல்லி: “பெண்களை தொடர்ந்து அவமதிக்கும், சக நாடாளுமன்ற உறுப்பினரிடம் தொடர்ந்து தரக்குறைவாக நடந்து கொள்ளும் திரிணமூல் எம்.பி. கல்யாண் பானர்ஜியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்,” என்று அக்கட்சியின் அதிருப்தி எம்பி ககோலி கோஷ் தஸ்திதார் வலியுறுத்தியுள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்பிக்களில் ஒருவரான ககோலி கோஷ் தஸ்திதார், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “தொடர்ந்து தவறு செய்பவரும் பெண்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்டவருமான ஒருவர் (கல்யாண் பானர்ஜி) சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். கண்ணியமான நாடாளுமன்ற உறுப்பினர்களிடமோ அல்லது வேறு எந்தவொரு பெண்ணிடமோ தரக்குறைவாக பேசக்கூடிய, மோசமாக நடந்துகொள்ளக்கூடிய ஒருவர் தண்டிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ககோலி கோஷ் தஸ்திதார் கடிதம் எழுதி இருந்தார். அதில், “தகாத வார்த்தைகளைப் பேசுபவராக, தரக்குறைவாக நடந்து கொள்ளக்கூடியவராக, பொருத்தமற்ற வார்த்தைகளைக் கொண்டு அவமதிப்பவராக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி இருக்கிறார். நாடாளுமன்ற வளாகத்திலேயே அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார்.
இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் கண்ணியத்தை சீர்குலைக்கும் முயற்சி. இது ஏதோ ஒரிரு முறை மட்டும் நடந்தது அல்ல. அவர் தொடர்ந்து இவ்வாறு நடந்து கொள்கிறார். அவரது இந்த அணுகுமுறை நாடாளுமன்றத்தில் இயல்பாக பங்கேற்கும் உற்சாகத்தை இழக்கச் செய்கிறது.
எனவே, அவை மரபுகளை வலியுறுத்தும் விதிகள் 349 மற்றும் 352 ஆகியவற்றின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்” என்பது குறிப்பிடத்தக்கது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。