












கைதான பல்ஜித் சிங். பறிமுதல் செய்யப்பட்ட சிசிடிவி கேமராக்கள்.
Updated on
:
2 min read
சண்டிகர்: பஞ்சாப் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலையான என்எச்44 காஷ்மீரின் நகரில் இருந்து கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சாப் முதல் காஷ்மீர் வரையிலான சாலையில் ராணுவ வாகனங்களின் போக்குவரத்து மிகவும் அதிகமாக இருக்கும்.
பாகிஸ்தானின் ஐஎஸ்எஸ் உளவாளிகள், பஞ்சாப் எல்லைக்கு உட்பட்ட என்எச் 44 நெடுஞ்சாலையில் அதிநவீன சிசிடிவி கேமராக்களை பொருத்தி பாகிஸ்தான் ராணுவத்துக்கு நேரலையாக காட்சிகளை அனுப்பி வருவதாக இந்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது.
இதுதொடர்பாக பஞ்சாப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி இரு வாரங்களுக்கு முன்பு மாநில எல்லைக்கு உட்பட்ட என்எச் 44 நெடுஞ்சாலையில் சில சிசிடிவி கேமராக்களை கண்டுபிடித்தனர்.
இவை சீனாவில் தயாரிக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் ஆகும். சூரிய ஒளியில் இயங்கக்கூடிய இந்த கேமராக்கள், பாகிஸ்தான் ராணுவத்துக்கு நேரலையாக காட்சிகளை அனுப்பி வந்திருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பான விசாரணையை பஞ்சாப் போலீஸார் மேலும் தீவிரப்படுத்தினர். இதன்பேரில் பஞ்சாபின் பதான்கோட் அருகேயுள்ள சாக் தார்வால் கிராமத்தை சேர்ந்த பல்ஜித் சிங் (30) என்பவரை போலீஸார் கைது செய்து உள்ளனர்.
இதுகுறித்து பஞ்சாபின் பதான்கோட் போலீஸ் எஸ்எஸ்பி தல்வீந்தர் சிங் தில்லான் நேற்று கூறியதாவது: என்எச் 44 தேசிய நெடுஞ்சாலையின் பதான்கோட் முதல் ஜம்மு வரையிலான சாலையின் பல்வேறு பகுதிகளில் பல்ஜித் சிங்கும் அவரது கூட்டாளிகளும் அதிநவீன சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளனர்.
இந்த கேமராக்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. நாலாபுறமும் சுழன்று உயர்தர வீடியோக்களை எடுக்கும் திறன் கொண்டவை. சூரிய ஒளியில் இயங்கக்கூடியவை.
இந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் நேரடியாக என்எச் 44 தேசிய நெடுஞ்சாலையை உளவு பார்த்துள்ளது. குறிப்பாக இந்திய ராணுவ வாகனங்கள், மத்திய பாதுகாப்பு படைகளின் வாகனங்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு உள்ளது.
என்எச் 44 தேசிய நெஞ்சாலையின் பாலங்கள், முக்கிய சந்திப்புகள், சில கடைகளில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டு உள்ளன. கைதான பல்ஜித் சிங்கிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.
துபாயை சேர்ந்த சிலரின் உத்தரவின்பேரில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியதாக அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார். அவரது கூட்டாளிகள் விக்ரம்ஜித் சிங், பல்வீந்தர் சிங், தரன்பிரீத் சிங் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். சுமார் 7 மாதங்கள் வரை சிசிடிவி கேமராக்கள் மூலம் உளவு பார்க்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
கைது செய்யப்பட்ட பல்ஜித் சிங்குக்கு போதை பொருட்கள் கடத்தல் கும்பலுடனும் தொடர்பு இருக்கிறது. இதுதொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீஸ் எஸ்எஸ்பி தல்வீந்தர் சிங் தில்லான் தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。