





















Updated on
:
1 min read
சென்னை: ‘முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர் ஒருவரை நியமித்திருப்பது சரியல்ல. இது பொதுமக்களிடம் தவறான நம்பிக்கைகளை ஊக்கப்படுத்துவதாகவே அமையும் என்பதால், ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், ‘முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலர் நியமனத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் நாடறிந்த பிரபல ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், தமிழ்நாடு அரசின் முதல்வரின்அரசியல் பிரிவு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டிப்பது வியப்பளிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம், தனது முகப்பு பதாகையில் மதச்சார்பின்மை, சமூக நீதி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” குறட்பாவை கொள்கை நிலையாக அறிவித்துள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் ஆன்மிக வழியில்லாமல் கடவுள் மீதும், வழிபாடுகள் மீதும் நம்பிக்கை கொண்டவராக இருக்கலாம்; அது, அவரது தனிப்பட்ட வாழ்க்கை முறையாகும். ஆனால், மதச்சார்பின்மை பண்புகளை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட அரசு எந்த மதச்சார்பு அடையாளத்தையும் கொண்டிருக்கக் கூடாது என்பது நாடு பின்பற்றி வரும் மரபாகும்.
அறிவியல் கண்ணோட்டமும், பகுத்தறிவு சிந்தனையையும் வளர்த்து, வலிமைப்படுத்த வேண்டிய அரசு, முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர் ஒருவரை நியமித்திருப்பது சரியல்ல. இது பொதுமக்களிடம் தவறான நம்பிக்கைகளை ஊக்கப்படுத்துவதாகவே அமையும் என்பதால், ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை மறுபரிசீலனை செய்து, ரத்து செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர்.
அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். "ஜோதிடம் தனை இகழ்" என்றார் பாரதியார். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல. இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல’ எனத் தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。