





















Updated on
:
1 min read
பெங்களூரு: பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி). தேவ்தத் படிக்கல், விராட் கோலி இணைந்து ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடி இருந்தனர்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 34-வது லீக் ஆட்டம் பெங்களூரு எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்து வீசியது. 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான சாய் சுதர்சன், 58 பந்துகளில் சதம் விளாசினார். கேப்டன் ஷுப்மன் கில் 32, ஜாஸ் பட்லர் 24, ஹோல்டர் 23, வாஷிங்டன் சுந்தர் 19 ரன்கள் எடுத்தனர்.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆர்சிபி விரட்டியது. ஜேக்கப் பெத்தல் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு விராட் கோலியும், தேவ்தத் படிக்கலும் இணைந்து 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
படிக்கல், 27 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். 2 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களை அவர் விளாசி ஆட்டமிழந்தார். விராட் கோலி, 44 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரது இன்னிங்ஸில் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்களை பதிவு செய்தார். ஜிதேஷ் சர்மா 10, கேப்டன் ரஜத் பட்டிதார் 8 ரன்களில் வெளியேறினர்.
குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் க்ருணால் பாண்டியா அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். 12 பந்துகளில் 23 ரன்களை அவர் விளாசினார். இதன் மூலம் 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது ஆர்சிபி முன்னேறியுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。