
























Updated on
:
2 min read
ஈரோடு: கோபியின் பெருமையாக மாறியுள்ள பாரம்பரிய பல்லுயிர் தளங்களை முழுமையாக பாதுகாக்க வேண்டும், என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் பகுதியில் உள்ள எலத்தூர் குளத்தை 3-வது பாரம்பரிய பல்லுயிர் தளமாக தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது.
அக்டோபர் மாதம் அதற்கு மிக அருகிலேயே உள்ள நாகமலை குன்றை 4-வது பாரம்பரிய பல்லுயிர் தளமாக அறிவித்தது. ஊர்ப் பறவைகளை கவர்வதில் முக்கிய இடம் பிடித்துள்ள எலத்தூர் குளம் மொத்தம் 96 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
சுற்று வட்டாரத்தில் உள்ள 21 கிராமங்கள்தான் இதற்கு நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக உள்ளன. இந்த குளத்துக்குள் முட்புதர் காடுகள், கரைக்காடு, வறண்ட புல்வெளி, சதுப்பு நிலம், ஆழமான நீர்ப்பகுதி, ஆழம் குறைவான பகுதி, மண் திட்டுகள், ஏரிக்கரை எனப் பலவிதமான நில அமைப்புகள் உள்ளன. 134 விதமான மரங்கள் கரைப்பகுதிகளில் உள்ளன.
பல்லாயிரக்கணக்கான பறவைகள் இந்த மரங்களில் தஞ்சம் புகுந்துள்ளன. கடந்த 2024-2025-ம் ஆண்டுக்கான ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பில் எலத்தூர் குளம் தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் 23-வது இடத்தையும் பிடித்துள்ளது.
அதேபோன்று 2024-ல் நடைபெற்ற தமிழ்நாடு ஒருங்கிணைந்த நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அதிக பறவைகளைக் கொண்ட நீர்நிலையாகவும் எலத்தூர் குளம் பதிவு பெற்றுள்ளது.
693 வகையான உயிரினங்கள்
‘சூழல் அறிவோம்’ என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி எலத்தூர் குளத்தில் 204 பறவையினங்கள், 174 பூச்சி இனங்கள், 228 தாவர வகைகள், 17 ஊர்வன, 18 எட்டுக்காலிகள், 20 மிதவை நுண்ணுயிரிகள், 8 பாலூட்டிகள், 24 இதர பல்லுயிர்கள் உட்பட 693 வகையான உயிரினங்கள் வாழ்வதாகக் கூறப்பட்டுள்ளது.
இவற்றில் 77 வலசைப் பறவைகள் (சீசனுக்கு மட்டும் வந்து செல்பவை) என்றும், அவற்றில் 47 தொலைதூர வலசைப் பறவைகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தம் 125 விதமான உள்ளூர்ப் பறவைகள் உள்ளன.
64 பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன. பன்னாட்டுப் பாதுகாப்பு ஒன்றியத்தின் சிவப்புப் பட்டியலில் (அழியும் அபாயத்தில்) உள்ள 9 பறவைகள் இங்கு இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று இந்தியாவில் பாதுகாப்பு முன்னுரிமை பட்டியலில் உள்ள 52 விதமான பறவைகள் இங்கு வருவதும் தெரிய வந்துள்ளது. குளத்தில் அதிக தண்ணீர் தொடர்ந்து இருப்பதால் மீன்களும் அதிகமாக இருக்கின்றன.
நாகமலைக் குன்று
எலத்தூர் குளத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் நாகமலை குன்று உள்ளது. நாகமலை குன்றின் உச்சியிலும், மலையடிவாரத்திலும் முருகன் கோயில்கள் அமைந்துள்ளன. மலையின் அடிவாரத்தில் தனிப்பாறையில் ஆஞ்சநேயரின் புடைப்புச் சிற்பம் கொண்ட தனிக்கோயில் உள்ளது.
நாகமலை குன்று பகுதியில் புலிக்குத்தி நடுகல், பாறைத்தட்டுகள் போன்ற வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய தொல்லியல் சான்றுகள் அதிகம் இருப்பதாக வரலாற்று க.ராஜன் தனது கொங்கு களஞ்சியம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
நாகமலைக் குன்று உச்சியைச் சுற்றிலும் உள்ள பாறைப் பகுதிகளில் 3 இடங்களில் நீர்ச்சுனைகள் உள்ளன. அரிய வகைப் பறவைகள் மட்டுமின்றி, அரிதான பல தாவரங்கள் இங்கு இருப்பதையும் தாவரவியல் வல்லுநர்களின் உதவியுடன் சூழல் அறிவோம் அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோபியின் பெருமையாக மாறியுள்ள இந்த இடங்களை முழுமையாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: குளம் மற்றும் குன்றின் பகுதிகளில் பறவை வேட்டை நடக்கிறது. அதை முற்றிலும் தடுக்க, 2 இடங்களிலும் வேட்டைத் தடுப்புக் காவலர்களை நியமிக்க வேண்டும். அதில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புத் தள எல்லையை வரையறுத்து, அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும். தாவரங்கள், உயிர்களின் வாழ்விடம் பாதிக்கும் வகையில் நில அமைப்பில் எந்த மாற்றங்களையும் செய்யக்கூடாது.
குளத்தில் நம்பியூர் பேரூராட்சி கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரையும் வேறு வழியில் வெளியே கொண்டு செல்ல வேண்டும், என்றனர். இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。