
























Updated on:
சென்னை: முதல்வர் ஜோசப் விஜய்யின் செயலாளர்களாக ப.செந்தில்குமார் மற்றும் லட்சுமிப்பிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றார்.
பதவியேற்பு நிகழ்வுக்கு பிறகு தலைமைச்செயலகம் வந்த அவர், முதல்வராக முறைப்படி பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து முதல்வருக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பூச்செண்டு, புத்தகங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து, முதல்வரின் செயலர் நிலை -1 மற்றும் 2 ஆகிய பொறுப்புகளுக்கான அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி, முதல்வரின் செயலராக நிலை-1 சுகாதாரத்துறை செயலராக உள்ள ப.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த பழனிசாமியின் செயலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஊரக வளர்ச்சித்துறை செயலர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.
முதல்வரின் செயலர் நிலை-2- ல் தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை செயலராக உள்ள லட்சுமி பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர, உள்துறை, பொது, சட்டம், மனித வள மேலாண்மை, பள்ளிக்கல்வி, ஊரக வளர்ச்சி, தொழில், நெடுஞ்சாலை, உயர்கல்வி, மகளிர் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதல்வர் அலுவலகத்துக்கு சார்பு செயலர், தனிச்செயலர், பிரிவு அலுவலர், உதவி பிரிவு அலுவலர், தனி உதவியாளர், உதவியாளர், தட்டச்சர், பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வரின் செயலர்களாக நியமிக்கப்பட்ட இரு ஐஏஎஸ் அதிகாரிகளும் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இருவரும் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றதுடன், தற்காலிக பேரவைத் தலைவர் பதவியேற்பு விழாவிலும் முதல்வருடன் இணைந்து பங்கேற்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。