























Updated on:
சூரியக் கட்சியின் ‘சிடுசிடு’ சூப்பர் சீனியர் தலைவர், தான் பெரிதும் நேசித்த தனது ‘பாடி’ தொகுதி மக்கள், தன்னை மூன்றாம் இடத்துக்கு பாஸ்பண்ணி விட்டதில் தாங்கமுடியாத வருத்தத்தில் தவிக்கிறாராம். அதனால், வாக்கு எண்ணிக்கை நாளில் தொகுதியைவிட்டு கிளம்பி தலைநகருக்கு வந்தவர், இதுவரை தொகுதிப் பக்கம் தலைவைத்தும் படுக்கவில்லையாம்.
‘‘நமக்கு ஒன்றும் பின்னடைவு இல்லை. இது விசில் அலையால் வந்த வினை. அதனால்தான் நம்ம தலைவரே தோத்துட்டாரு.. விடுங்கப்பா... நமக்கு வாக்களிச்ச மக்களுக்கு நன்றி சொல்லணும் வாங்க’’ என்று ‘கதிரான’ மகன் கட்டாயப்படுத்தி அழைத்தாராம்.
அதை ஏற்க மறுத்தவர், ‘‘அலையும் கிடையாது... மழையும் கிடையாது. அப்படி அலை அடிச்சிருந்தா 200 தொகுதிகளுக்கு மேல அவங்க ஜெயிச்சிருக்கணும். அப்படியா நடந்திருக்கு? தொகுதி மக்களுக்காக பாத்துப் பாத்து எவ்வளவோ செஞ்ச நான், அவங்க என்னை கைவிட மாட்டாங்கன்னு நம்புனேன். ஆனா, அவங்க துரோகம் பண்ணிட்டாங்க. அவங்கள மறுபடியும் சந்திக்க எனக்கு விருப்பம் இல்லப்பா.. விட்டுரு” என்று சொல்லிட்டாராம்.
‘‘நான் மறையும்போதும் எம்எல்ஏவாகவே இருக்கணும். மறைவுக்கு பின்னாடி, என் அஸ்தியை தொகுதி முழுக்கத் தூவணும்’’ என்று தேர்தலுக்குத் தேர்தல் நெகிழ்ச்சியாய் சொல்லிக் கொண்டிருந்த சூப்பர் சீனியர், இப்போது தொகுதியை வெறுப்பதுடன் மட்டுமல்லாது, தன் வசம் உள்ள தலைமைப் பதவியையும் வேறு யாருக்காவது தரச் சொல்லிவிடலாமா என்ற யோசனையில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。