


























Updated on
:
2 min read
சென்னை: இந்து மதத்தை தாக்குவதன் மூலம் திமுக மீண்டும் ஆட்சிக் வராமலேயே இருப்பதை உறுதிசெய்ய உதயநிதி ஸ்டாலின் விரும்புகிறார். நித்தியமான அந்த சனாதன தர்மம் அவரது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கட்டும் என்று ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது உரையின் இறுதியில், ”மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்” எனக் கூறி முடித்தார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்தக் கருத்துக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர், “உதயநிதி ஸ்டாலின் தமிழில் சனாதனம் என்பதை திரும்பத் திரும்ப தாக்கிப் பேசும்போது, மிகுந்த மதப்பற்று கொண்ட தமிழ் இந்துக்களிடையே ஏன் அதிகப்படியான கொந்தளிப்பு ஏற்படவில்லை?
இதற்கு காரணம் மொழிதான் என்று நான் கருதுகிறேன்.
தமிழ் மொழியில் சனாதனம் (நித்தியமானது என்று பொருள்படும்) என்ற சொல் வழக்கமான பயன்பாட்டில் இல்லை. பெரும்பாலான தமிழ் மக்களுக்கு இந்த சொல் பற்றி தெரியாது. சிறுவயதில் எனக்கே கூட இச்சொல் பற்றி தெரிந்திருக்கவில்லை.
அதேநேரத்தில், தர்மம் அல்லது தருமம் என்ற சொல் மிகவும் பரவலாகப் புழக்கத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் தர்மபுரி என்ற பெயரில் ஒரு மாவட்டமே உள்ளது. மேலும், தர்மம் என்ற சொல்லுக்கு இணையான அதே பொருளில் தமிழில் அறம் என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது.
சுவாரஸ்மான விஷயம் என்னவென்றால் இந்தி மொழியில் தரம் (dharam) என்ற சொல் பொதுவாக மதம் என்பதையே குறிக்கிறது. அதன்படி, இந்து மதம் என்பது இந்து தரம் அல்லது சனாதன தரம் என்றும் கிறிஸ்தவ மதம் என்பது ஈசாய் தரம் என்றும் இந்தியில் அழைக்கப்படுகிறது.
ஆனால், தமிழ் மொழியின் பயன்பாட்டில் தர்மம் என்ற சொல் இந்தியில் குறிக்கப்படும் இந்து தரம் என்பதையே நடைமுறையில் உணர்த்துகிறது.
இப்போது உதயநிதி ஸ்டாலின் தமிழில் தர்மம் என்பதைத் தாக்கிப் பேசி இருந்தால் (தமிழில் அச்சொல் நடைமுறையில் இந்து மதம் என்பதையே குறிப்பதால்) அவர் அதர்மத்தைப் போதிப்பதாகக் கூறி பரவலான விமர்சனத்துக்கு உள்ளாகி இருப்பார்.
அதனால்தான் அவர் தாக்குவதற்கு சனாதனம் என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஏனெனில், அச்சொல் தமிழ் மக்களிடையே பரவலாக அறியப்பட்ட ஒன்றாக இல்லை.
தனது உண்மையான முயற்சிகள் அனைத்தின் மூலமாகவும் அவர் அச்சொல்லை தமிழ் மக்களிடையேயும் பிரபலப்படுத்தி வருகிறார். மேலும், தமிழ்நாட்டில் ஏற்கனவே வலுவாக இருந்த திமுகவுக்கு எதிரான வாக்குகளை அவர் இன்னும் அதிகப்படுத்தி உள்ளார். திமுகவுக்கு எதிரான அந்த பலத்த அலை காரணமாகவே அக்கட்சியால் இதுவரை எந்த தேர்தலிலும் தனித்து வெற்றிபெற முடிந்ததில்லை.
இந்து தெய்வங்கள் மீது அவர்கள் தொடர்ந்து தொடுத்து வந்த தாக்குதல்களின் மூலமாகவே திமுகவுக்கு எதிரான அந்த அலையை அவர்கள் உருவாக்கினார்கள். அதிமுக ஒருபோதும் அத்தகைய தாக்குதல்களை நடத்தியதில்லை. மாறாக, திமுகவுக்கு எதிரான அந்த அலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் அறுவடை செய்தார்கள்.
இப்போது திமுகவுக்கு எதிரான புதிய கட்சியாக தவெக உருவெடுத்துள்ள போதிலும், திமுகவுக்கு எதிரான வாக்குகள் அதிமுகவும் பிரித்துக்கொண்டபோதிலும், திமுக மிக அதிகமான பணத்தைச் செலவழித்திருந்தபோதிலும், திமுக வலுவான கூட்டணிக் கட்சிகளைக் கொண்டிருந்த போதிலும், தவெகவுக்கு எந்த கூட்டணியும் இல்லாத போதிலும் திமுக இந்த தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வராமலேயே இருப்பதை உறுதி செய்ய உதயநிதி விரும்புகிறார். நித்தியமான அந்த சனாதன தர்மம், அவரது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。