




















Updated on:
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பித்து, மக்களுக்கு சுவையான, தரமான உணவு வகைகளை வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சென்னை சாந்தோமில் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு அளிக்கும் அம்மா உணவகத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி, அதன்பின் இதர மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு இந்த திட்டம் விரிவாக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுக ஆட்சியிலும் இத்திட்டம் அதே பெயரில் தொடர்ந்தது.
இந்நிலையில், முதல்வராக விஜய் பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு திட்டத்தையும் ஆய்வு செய்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைக்க அவர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் தற்போது சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.
சமீபகாலமாக, இந்த உணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று முதல்வர் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அரசுத் துறை செயலர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
அம்மா உணவகங்களுக்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், தேவையான சமையல் உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி வழங்குமாறும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த மறுசீரமைப்பு பணிகள் மற்றும் பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியில் இருந்து செலவினங்களை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。