























Updated on
:
1 min read
பண மோசடி வழக்கில், அரசு தரப்பு சாட்சியாக மாறக் கோரி தாக்கல் செய்த மனுவை, பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் திரும்பப் பெற்றார்.
பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர், அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாகக் கூறி தொழிலதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலரை ஏமாற்றி பணமோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இரட்டை இலை சின்னத்தை மீட்டு தருவதாகக் கூறி, டிடிவி தினகரன் தரப்புக்காகத் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், சுகேஷ் கைது செய்யப்பட்டார்.
சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கை ஏமாற்றி ரூ.200 கோடி மோசடி செய்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் மீது டெல்லி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் கிடைத்த பணத்தைக் கொண்டு அவர், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ஏராளமான, விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சுமத்தியது. இதன் காரணமாக, இந்த பணமோசடி வழக்கில் ஜாக்குலின் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக மாற, ஜாக்குலின் பெர்னாண்டஸ் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் அரசு தரப்பு சாட்சியாக மாறுவதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அவர் இந்த வழக்கில் ஒரு பாதிக்கப்பட்ட நபர் அல்ல, மாறாக குற்றத்தின் மூலம் கிடைத்த பணத்தில் பலன்களை அனுபவித்தவர் என்று அமலாக்கத்துறை வாதிட்டது. அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஜாக்குலின் தரப்பு வழக்கறிஞர் அந்த மனுவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிரசாந்த் சர்மா, மனுவைத் தள்ளுபடி செய்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。