
























Updated on
:
1 min read
ஐபிஎல்லில் பேட் மற்றும் பந்து சமநிலை திரும்ப வேண்டும்; இம்பாக்ட் பிளேயர் விதியை நீக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் பரிந்துரை செய்துள்ளார்.
அகமதாபாத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2026 இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவின் 21-ம் நூற்றாண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய சச்சின் டெண்டுல்கர், ஐபிஎல் கிரிக்கெட்டில் பேட் மற்றும் பந்துக்கு இடையேயான சமநிலையை மீட்டெடுக்க சில முக்கிய மாற்றங்கள் அவசியம் என வலியுறுத்தினார்.
குறிப்பாக, 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘இம்பாக்ட் பிளேயர்’ விதி நீக்கப்பட வேண்டும் என்கிறார் சச்சின். இதனால் ஆல்ரவுண்டர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய் ஒரு கட்டத்தில், அல்லது ஒரு காலத்தில் ஆல்ரவுண்டர்கள் என்பவர்கள் உருவாகாமலே போகுமாறு ஆகிவிடும் என்று எச்சரித்துள்ளார்.
“தனிப்பட்ட முறையில் நான் சொல்ல விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், ‘இம்பாக்ட் பிளேயர்’ விதி நீக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். டி20 போட்டியில் வெறும் 20 ஓவர்கள்தான் விளையாட வேண்டும். அதிலும் கூடுதல் ஒரு பேட்ஸ்மேனை அணியில் சேர்க்கிறோம். ஏற்கனவே பந்துவீச்சாளர்கள் கடுமையாக சவாலை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த விதி அந்த சமநிலையை மேலும் குலைக்கிறது என்று நான் உணர்கிறேன்”
பவர்பிளே விதியிலும் மாற்றம் வேண்டும்:
ஆறு ஓவர்கள் கொண்ட பவர்பிளேவில் தற்போது இரண்டு பீல்டர்களுக்கு மட்டுமே 30-யார்டு வட்டத்திற்கு வெளியே நிற்க அனுமதி உள்ளது. முதல் நான்கு ஓவர்கள் பேட்ஸ்மேன்களுக்கான பவர்பிளேவாக அதே விதிமுறையுடன் தொடரட்டும். அதன்பிறகு மீதமுள்ள இரண்டு பவர்பிளே ஓவர்களை, பந்துவீசும் அணியின் கேப்டன் எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை அவரே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும்.
அந்த இரண்டு தொடர்ச்சியான ஓவர்களில் ஒரு கூடுதல் பீல்டரை வட்டத்திற்கு வெளியே நிறுத்த அனுமதிக்க வேண்டும். போட்டியின் எந்த கட்டத்திலும் அதை பயன்படுத்தலாம். இதன் மூலம் பந்துவீசும் அணி ஆட்டத்தை சிறப்பாக கட்டுப்படுத்த முடியும்.”
ஒரு பந்துவீச்சாளருக்கு ஐந்து ஓவர்கள் வீச அனுமதிக்க வேண்டும். ஏனெனில் அந்த ஐந்தாவது ஓவரை அணியின் சிறந்த பந்துவீச்சாளர்தான் வீசுவார். அந்த சிறந்த பந்துவீச்சாளர் இன்னும் ஒரு ஓவர் அதிகமாக பந்துவீசுவதை ரசிகர்கள் பார்க்க விரும்ப மாட்டார்களா?
சிறந்த பேட்ஸ்மேன்கள் சில நேரங்களில் 20 ஓவர்களும் களத்தில் இருந்து பேட்டிங் செய்கிறார்கள். அப்படியிருக்கும்போது சிறந்த பந்துவீச்சாளருக்கு ஏன் ஐந்து ஓவர்கள் வீச வாய்ப்பு வழங்கக்கூடாது?” இவ்வாறு சில பரிந்துரைகளை சச்சின் வலியுறுத்தியுள்ளார்.
21ஆம் நூற்றாண்டின் சிறந்த பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்ட சச்சின் டெண்டுல்கர், ஐபிஎல் போட்டிகளில் அதிகரித்து வரும் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும், பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்கவும் இந்த மூன்று முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。