


















Updated on:
சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அதை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.
“தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், “வாணவேடிக்கை வாக்குறுதிகளை” அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையாலும், “ஆழம் தெரியாமல் காலைவிட்டு” அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் “புஸ்வானமாக” மாறிவிட்டதை மறைக்க, “ஹைப்” ஏற்றிய அறிக்கை ஒன்றினை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு , அதனையும் “ஃப்ளாப்” ஆக்கியிருக்கிறது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விடுவார்களோ என அஞ்சி அவர்களின் கோபக் கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, வேறு எதற்குமல்ல. எனினும் , உரிய விளக்கங்களை விரைவில் விரிவாகக் கூறுகிறேன்” என்று எக்ஸ் சமூக வலைதள பதிவில் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று வெளியிட்டார். அரசின் வரவு செலவு கணக்குகள், நிதி நிலை, கடந்த அரசின் செயல்பாடுகள் குறித்து இந்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களின் விவரம்:
> திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
> 2021 முதல் 2026 வரை வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இந்தக் கால கட்டத்தில் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளது, மூலதன செலவு குறைந்துள்ளது, கட்டாய செலவு உயர்ந்துள்ளது.
> தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை கோவிட் தொற்று ஆண்டைவிட கடந்த 5 ஆண்டுகளில் குறைந்துள்ளது.
> ரூ.10 லட்சம் கோடி மாநிலத்துக்கு நேரடி கடன் உள்ளது.
> மாநிலத்தில் வருவாய் பற்றாக்குறை 78,324 கோடி ரூபாய்.
> மாநிலத்தின் மொத்த செலவுகளில் 22.8% வட்டிக்கு செல்கிறது.
> தமிழகத்தில் மொத்த செலவில் 64.4% கட்டாய செலவுக்கு செல்கிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。