


























Updated on
:
1 min read
கோவில்பட்டி: காதல் விவகாரத்தில் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் கத்தியால் குத்தி இளைஞர் கொலை செய்யப்பட்டார். பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள கரடிகுளத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சஞ்சய் (19). இவரும், கெச்சிலாபுரத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் 17 வயது மகளும் காதலித்து வந்துள்ளனர். இதை விரும்பாத குமார், தனது மகளை கோவில்பட்டியில் உள்ள தனது தம்பி மாரிமுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சஞ்சய் தனது நண்பர்களுடன் சென்னை புறப்பட்டார். இதற்காக அவர்கள் கோவில்பட்டி புதிய கூடுதல் பேருந்து நிலையம் வந்தனர். அப்போது குமார், அவரது மகள், அவரது சகோதரர் மாரிமுத்து, உறவினர் சங்கர நாராயணன் உள்ளிட்ட 5 பேர் அங்கு வந்துள்ளனர். ஆண்கள் மட்டும் சஞ்சய்யை தனியாக அழைத்துச் சென்று பேசியுள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு 3 பேரும் சஞ்சய்யை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். அப்போது எதிர்பாராமல் கத்தி பட்டு மாரிமுத்துவும் காயமானார்.
கோவில்பட்டி மேற்கு போலீஸார் விரைந்து சென்று, காயமடைந்த சஞ்சய் மற்றும் மாரிமுத்து ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சஞ்சய் உயிரிழந்தார்.
திருமணம் செய்து வைப்பதாகக் கூறி ஏமாற்றி, அப்பெண்ணையே சஞ்சய்யிடம் பேச வைத்து அவரை பேருந்து நிலையத்தில் வைத்து கொலை செய்துள்ளனர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குமார், மாரிமுத்து, சங்கரநாராயணன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。