























Updated on:
சென்னை: நிலம் விற்பனை விவகாரத்தில் மோசடியில் ஈடுபட்டதோடு ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டியதாக திமுக எம்.பி. மகன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அன்பரசு (67). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் தொழில் அதிபர் ஒருவருக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தின் பொது அதிகாரப் பத்திரம் இருந்துள்ளது.
அதேவேளையில் அந்த நிலம் வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்தது. அந்த நிலத்தை விற்க அன்பரசு முயன்று வந்துள்ளார். அதன்படி, வட சென்னை திமுக எம்பி கலாநிதி வீராசாமி மகனும், தனியார் நிறுவனத்தின் நிர்வாகியுமான சித்தார்த்தை அணுகி உள்ளார்.
இதில் இருதரப்புக்கும் இடையே நிலத்தை விற்பது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அன்பரசு, அந்த நிலம் தொடர்பான ஆவணங்கள், பொது அதிகார பத்திரம் ஆகியவற்றை சித்தார்த் தரப்பிடம் தந்துள்ளார்.
ஆனால், இந்த விவகாரத்தில் சித்தார்த் தரப்பு, தாங்கள் ஒப்புக்கொண்டபடி அன்பரசுக்கு பணத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அன்பரசு, தனக்கு பேசிய தொகையை தரும்படி சித்தார்த் தரப்பிடம் தொடர்ந்து கேட்டுள்ளார். அப்போது வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
சித்தார்த் தரப்பு, அன்பரசுவை ஜாதியை சொல்லி திட்டி மிரட்டினராம். இதுகுறித்து, அண்ணாநகர் காவல் நிலையத்தில் 2024-ல் அன்பரசு புகார் அளித்தார். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், அண்ணாநகர் காவல் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பு அன்பரசு மீண்டும் புகார் செய்துள்ளார். அதன்படி, போலீஸார் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், மோசடி உட்பட 5 பிரிவுகளின் கீழ் சித்தார்த், கலாநிதி வீராசாமி எம்பியின் உதவியாளர் ஆசைத்தம்பி, மாநகராட்சி 102-வது வார்டு திமுக கவுன்சிலர் ராணி ரவிச்சந்திரன், விருதுநகரைச் சேர்ந்த ஆதிநாராயணன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。