
























Updated on:
கொல்கத்தா: “நான் மம்தாவை தோற்கடிக்காவிட்டால், சந்திரநாத் ரத் எனது உதவியாளராக இருந்தால், அவர் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்” என்று சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் உச்சகட்டமாக, பாஜகவின் முக்கியத் தலைவரும், முதலமைச்சர் பதவிக்கு முன்னிலையில் இருப்பவருமான சுவேந்து அதிகாரியின் நெருங்கிய உதவியாளர் சந்திரநாத் ரத், கொல்கத்தா அருகே சுட்டுக் கொல்லப்பட்டார்.
புதன்கிழமை இரவு (மே 6) வட 24 பர்கானாஸ் மாவட்டத்தின் மத்தியம்கிராம் பகுதியில் சந்திரநாத் ரத் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது சம்பவம் நடந்தது.
இந்நிலையில், சுரேந்திர ரத் உடற்கூராய்வு நிறைவுபெற்ற நிலையில் மருத்துவமனை வெளியில் செய்தியாளர்களை சந்தித்த சுவேந்து அதிகாரி, “நான் மம்தாவை தோற்கடிக்காவிட்டால், சந்திரநாத் ரத் எனது உதவியாளராக இருந்தால் அவர் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்.
இந்தக் கடினமான நேரத்தில் நான் சந்திரநாத் ரத் குடும்பத்துடன் நிற்கிறேன். அவரது குடும்பத்தினர், இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவர் உடலில் 4 புல்லட்டுகள் துளைத்திருந்தன. இது ஒரு நன்கு திட்டமிட்ட கொலை. ரத் தனது வாழ்நாளில் எந்த அரசியல், தனிப்பட்ட எதிரியையும் சம்பாதிக்கவில்லை.
இந்தக் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை டிஜிபி தெரிவித்திருக்கிறார். சிலரை சந்தேகத்தில் பேரில் கைது செய்துள்ளனர்.
குற்றவாளிகள் போலீஸார் நெருங்கிவிட்டனர். நிச்சயம் அவர்களை கைது செய்வார்கள். சிஐடி, எஸ்ஐடி, தடயவியல் துறை என அனைத்தும் இந்த வழக்கில் தீவிரமாக செயல்படுகின்றன” என்றார்.
கொல்லப்பட்ட சந்திரநாத் ரத், பவானிப்பூர் தேர்தல் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் களங்களில் சுவேந்து அதிகாரிக்கு வலதுகரமாகச் செயல்பட்டவர். சுவேந்து அதிகாரியின் அரசியல் நகர்வுகளில் முக்கியப் பங்காற்றியவர் என்பதால், இந்தப் படுகொலை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இந்தக் கொலைச் சம்பவத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் தான் காரணம் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள திரிணமூல், வன்முறைக்குத் தங்களது கட்சியில் இடமில்லை என்றும், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.
மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டு வருவதால், தேர்தல் ஆணையம் மாநில நிர்வாகத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வன்முறையில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。