























Updated on:
சென்னை: “திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததால் அதிமுகவினர் தவெகவுக்கு வருகின்றனர். இங்கு குதிரை பேரம் 100 சதவிகிதம் நடக்க வில்லை. பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் நீதிமன்றம் சென்றால் அதை சட்டப்படி எதிர்கொள்வோம்” என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தகுதி அடிப்படையிலேயே அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். ஏற்கெனவே பணம் கொடுத்து நியமனம் நடைபெற்றதாக கேள்விப்பட்டோம். இனி அப்படி நடக்காது; ஏற்கெனவே உள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில் நியமனம் நடைபெறுகிறது. அரசு வழக்கறிஞர்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நியமிக்கப்பட உள்ளனர்.
மேகேதாட்டு அணை கட்ட முதல்வர் விஜய் அனுமதிக்க மாட்டார். இதற்கு தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.
அதிமுக எம்எல்ஏக்கள் ஏன் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தார்கள், அதிமுகவில் ஏன் பிளவு ஏற்பட்டது என அவர்களே விளக்கி உள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், உதயநிதி மற்றும் இன்னும் சிலர் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தார்கள். இதை அங்கிருந்த இரண்டு கட்சிக்காரர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றிய தலைவர்களும் தெளிவாக சொல்லிவிட்டனர்.
அவர்கள் தங்களது குடும்பத்தை காப்பாற்ற முயற்சி செய்தனர். இதை நம்பி அக்கட்சி தொண்டர்கள் எப்படி அங்கு பயணிப்பார்கள். திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததால் அதிமுகவினர் தவெகவுக்கு வருகின்றனர். இது அவர்களின் தனிப்பட்ட முடிவு; இதை நாம் எப்படி தவறு என சொல்ல முடியும். இங்கு குதிரை பேரம் 100 சதவிகிதம் நடக்க வில்லை. பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் நீதிமன்றம் சென்றால் அதை சட்டப்படி எதிர்கொள்வோம். எங்கள் கூட்டணி கட்சிகள் எங்களுக்கு தோளோடு தோள் கொடுக்கிறார்கள்” இவ்வாறு அவர் பேசினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。